இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ஆஜராகின்றனர்!

mahinda and gotabaya

 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார்.

 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி  சுகாதார அமைச்சர் பதவியை வழங்கியமை இலஞ்சம் கொடுத்ததாகும் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 இதேவேளை, காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்கப்பல், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சட்டவிரோதமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் அவன்காட் மெரின்டைம் நிறுவனத்தின் தலைவருக்கு இருக்கின்ற தொடர்பு ஆகிய குறித்து கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவிருக்கின்றன.  

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடனான கணக்குவழக்கு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணை நடத்தப்படவிருக்கின்றது .