சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற நபர் : பிரதேச மக்களால் நையப்புடைப்பு !

F4d5f45d4f-news

எட்டு வயது சிறுமி ஒருவரை காட்டுப் பகுதிக்குள் பலவந்தமாக கடத்திச் சென்ற நபர் ஒருவரை கையும் மெய்யுமாக பிடித்த பிரதேச மக்கள், குறித்த நபரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று பகல் புத்தளம் தில்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் குறித்த பகுதியில் சில மணிநேரம் பதற்ற நிலை நிலவியது.

புத்தளம், தில்லையடி பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் ஒருவர் குறித்த சிறுமியை பலவந்தமாக காட்டுக்குள் தூக்கிச் செல்வதை சிலர் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு அறிய வந்ததையடுத்து, குறித்த காட்டுப்பகுதிக்குள்  சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட போதும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

பின்னர் நீண்ட மணிநேர தேடுதலுக்கு பின்னர் சந்தேக நபரை பிடித்த பிரதேச மக்கள் குறித்த நபர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவமானது தில்லையடி பகுதியில்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.