வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது தொடர்பான விசேட சந்திப்பு…… திறக்கப்பட இருக்கும் விமான நிலையம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் புதிய சுகாதார விதிமுறைகளை தயாரிப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் தீர்மானத்திற்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் கூறப்பட்டுள்ளதாவது,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமச்சர் பவித்திரா வன்னியாராச்சி, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரனத்துங்க மற்றும் ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோயியல் மற்றும் கொவிட் நோய்தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பிரதானிகள் உட்பட சுகாதார அதிகாரிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்து சபை உறுப்பினர்கள், ஹோட்டல் துறையின் பிரதானிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலத்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் விமான நிலையத்தை திறந்து சுற்றுலாத்துறையை மீண்டும் நடத்திச் செல்வதற்காக, புதிய சுகாதார விதிமுறைகளை தயாரிப்பதற்காக முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் தீர்மானத்திற்கமைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ் .ஹெட்டியாராச்சி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ ஆகியோரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.