அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது!

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது நேற்று ஜாலியவை, நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

jaliya-wikramsoorya

இரகசியமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்லவே ஜாலிய திட்டமிட்டிருந்தார் எனவும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் காத்திருந்து கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட ஜாலியவிடம் மிக நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

ஜாலிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர். 

இந்த விசாரணைகளுக்காக ஜாலிய, நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் எவ்வித அறிவிப்பும் விடுக்காது நாட்டை விட்டு செல்ல முயற்சித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.