யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு விஷேடசெயலணி உதவி : மௌலவி சுபியான்

பாறுக் ஷிஹான்
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும்   முகமாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் முயற்சியின் பலனாக   பல நடவடிக்கைகள் தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சரின்  மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளரும் யாழ் மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவிபி.ஏ.எஸ் சுப்யான் குறிப்பிட்டுள்ளார்.
  வட மாகாண விசேட செயலணி மூலமாக முஸ்லீம்களின் வாழ்விட பிரதேசத்தின் உட்கட்டுமானம் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துமுகமாகவும் அரசாங்கத்தினால்   மீள் குடியேற்றத்திற்காக  விசேஷடதிட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
 இதனடிப்படையிலேயே வடக்கிலிருந்து நீண்டகாலமாக  இடம்பெயர்ந்து வாழ்வோருக்காக அவர்களின் சொந்த இடத்தில் மீள் குடியேற்றுவதற்காக இச் செயலணி நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை இணைத்தலைவர்களாகக் கொண்டு செயலணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
இம் மீள்குடியேற்றச் செயலணியானது வடமாகாணத்தில் மீள்குடியேறிவரும் மக்களினது அடிப்படைத் தேவைகள் இடம்பெயர்க்கப்பட்டுநாட்டின் பலபாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்  வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களினது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கான தீர்வைப்  பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவுள்ளது. 
விரைவில் வடக்கு முஸ்லிம் குடும்பங்களுக்கு வினாகொத்துக்கள் அடங்கிய விண்ணப்பப்படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டு அவர்களிடத்திலிருந்து விபரங்கள் கருத்துக்கள் பெறப்படவுள்ளது.  இது சர்வதேசநிறுவனமொன்றின் கண்காணிப்பில் இடம்பெறவுள்ளது.
மீள்குடியேறவிரும்புவோரும் தொடர்ந்துதென்னிலங்கையில் தங்கவிரும்புவோரும் இதன் மூலம் இனங்காணப்படுவதோடு வடக்கிற்கு செல்லவிரும்புவோருக்கு உரிய தீர்வுபெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. 
இதன் மூலம் பெறப்படும் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மீள்குடியேற்றசெயலணி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தை சொந்தமண்ணில்  மீள்குடியேற ஆர்வமுள்ள வடமாகாண முஸ்லிம்கள் நன்குபயன்படுத்திக் கொள்ளுமாறும் இது போன்றசந்தர்ப்பங்கள்  இனி ஒருபோதும் வருவதற்கான வாய்ப்புக்களில்லை யென்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு  மௌலவி சுபியான் கேட்டுள்ளார்.