ஜனாதிபதியிடம் பாரிய ஊழல், மோசடி அறிக்கைகளை கையளிக்கவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடைந்த மேலும் மூன்று அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அறிக்கைகளை கையளிக்க தினம் ஒன்றை ஒதுக்கி தருமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒதுக்கும் தினத்தில் அறிக்கைகளை அவரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் தொடர்பான விசாரணை, சிலாபம் மற்றும் குருணாகல் தோட்ட நிறுவனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, டைனமைட் தொகை ஒன்று பயன்படுத்தக் கூடிய காலத்தை கடந்து விற்பனை செய்யாமல் வைத்திருந்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை சம்பந்தமான விசாரணை ஆகிய மூன்று விசாரணைகள் குறித்த அறிக்கைகளை ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளது எனவும் அதன் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைகள் ஜனாதிபதியின் கைக்கு செல்வதால் யார் பக்கம் விசாரணைகள் திரும்பும், யாரெல்லாம் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பது அனைவர் மத்தியிலும் ஒரு பீதியை உருவாக்கியுள்ளது.