இலங்கையில் தமிழ் என்ற ஒரு மொழி முற்றாக அழிந்தே போய்விடும் என்பது மாத்திரம் உறுதி

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்

 

 இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.

இந்தியா, இலங்கை , மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில் சிறிய அளவிலும்  பேசப்படுகிறது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

tamil language

 

இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட தமிழ் மொழி இலங்கையில்  அரச கரும மொழி என்பதற்கு அப்பால் அரச கொலை மொழியாக, அரச பிழை மொழியாக இருப்பது மிக வருந்தத்தக்கதாகவும் அதே நேரம் தமிழ் மொழியை தாய்மொழியாய்க் கொண்டு வாழும் இலங்கை மக்களின் மனதை புண்படுத்தும்படியாகவும் உள்ளது. இலங்கையில் உள்ள சாதாரண மலசல கூட கழிப்பிடங்கள் முதல் அரச அலுவலகங்கள் வரை உள்ள பெரும்பாலான பெயர்பலகைகளிலும் தமிழ் இரத்தம் சொட்டச் சொட்ட கழுத்து நெறித்து கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சை வைத்து விட்டு அந்த பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் போது  எழுத்துப் பிழை விட்டிருக்கும் மாணவர்களுக்கு புள்ளிகளை குறைக்கும் பரீட்சை திணைக்களமே எழுத்துப் பிழை விட்டிருப்பதற்கு என்ன செய்வது…???

இலங்கையில் இவ்வாறான தமிழ் படு கொலைகள் தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் என்ற ஒரு மொழி இலங்கையில் முற்றாக அழிந்தே போய்விடும் என்பது மாத்திரம் உறுதி.

பல்லின சமூகங்கள் ஒன்றாக வாழும் இலங்கைத் திருநாட்டில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தத்தம் மொழி உரிமையைப் பின்பற்ற இலங்கை அரசியல் யாப்பிலேயே தெளிவாகப் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசியல் யாப்பில் நான்காவது அத்தியாயத்தில் 18 தொடக்கம் 25வது வரையான உறுப்புரைகள் மொழியைப் பற்றியே விபரிக்கின்றது. இலங்கையின் அரச கரும மொழி சிங்களம் எனவும் தமிழும்-சிங்களமும் இலங்கையின் தேசிய மொழி எனவும் 18வது மற்றும் 19வது உறுப்புரைகள் குறிப்பிட்டுள்ள போதிலும் 13வது அரசியல் திருத்தத்தின் மூலம் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மொழிக் கொலைகள் பெரும்பாலும் சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள அலுவலங்கள், அரச காரியாலங்கள், வங்கிகள், வீதிப் பெயர்பலகைகள், மலசல கூடங்கள், போக்குவரத்து நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களிலேயே அதிக அளவு இடம் பெறுகின்றது. இலங்கையில்  தேசிய மொழிகள் மற்றும் ஒருமைபாட்டுக்கு என தனியான அமைச்சு அதற்கு திணைக்களங்கள் என இருந்தும் தமிழ் மொழிக் கொலைகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

தேசிய கலந்துரையாடல், சக வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைய இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் வரவு செலவுத் திட்டத்தில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்துக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளது. எவ்வாறுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் இலங்கையில் இடம் பெறுகின்ற தமிழ் படுகொலைகளை நிறுத்தாது விட்டால் பயனேது.

tamil langua

 

இலங்கையில் தமிழை கரைத்துக் குடித்த எத்தனையோ பேராசிரியர்கள், புலவர்கள், பண்டிதர்கள் என இருக்கையில் தமிழ் கொல்லப்படுவதை உண்மையில் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே உள்ளது.

தேசிய கலந்துரையாடல், சக வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் அவர்கள்  மற்றும் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ் அமைச்சர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி இலங்கையில் அரச காரியாலங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் இடம் பெறும் தமிழ் படுகொலைகளை தடுத்த நிறுத்த வகை செய்ய வேண்டும்.

இதுவரை தமிழ் பிழையாக அச்சடிக்கப்பட்டுள்ள அரச காரியாலய பெயர்பலகைகள், வைத்தியசாலை பெயர் பலகைகள், அரச பஸ்களின் பெயர் பலகைகள் என அத்தனையும் திருத்தம் செய்யப்பட்டு சரியான தமிழ் அர்த்தத்தோடு மாற்றியமைக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் அச்சடிக்கப்படுகின்ற அத்தனை அரச பெயர் பலகைகளிலும் தமிழ் சரியாகத்தான் அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க தமிழில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் அது காண்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும்.

பெயர்பலகைகளை அச்சிடும் போது மொழிக்கொலைகள் இடம் பெறா வண்ணம் சரி பார்க்கும் படி அனைத்து தனியார் மற்றும் அரச அச்சகங்களுக்கும் அரச அதிகாரிகளால் அறிவுருத்தப்பட  வேண்டும்.

இலங்கையில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதுவிடயத்தில் கவனம் செலுத்தும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.