கல்முனைத் தொகுதி அரசியல்வாதிகளே, இது உங்களின் கவனத்திற்கு

ஜபீர் முஹம்மத்

 நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள கல்முனை மத்தியமுகாம் பிரதான வீதியிலுள்ள சவளக்கடை வீரத்திடல் சந்தியில் பஸ் தரிப்பிடம் இன்மையினால் பயணிகளும், பாடசாலை மாணவர்களும் நாளந்தம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

Map_and_Bus_Stop,_Northern_General_Hospital,_Sheffield_-_geograph_Fotor

இவ் வீதியானது சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பாதையாகவுள்ளதால் வீரத்திடல், 4ஆம் கொளனி, 5ஆம் கொளனி போன்ற கிராமப்புற மாணவர்கள் பிரத்தியேக பகுதி நேர வகுப்புகளுக்கு நற்பிட்டிமுனை மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களுக்கு செல்வதற்கும், இதேவேளை கல்முனை நகரிற்கு நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செல்லும் பிரதேச மக்களும் இச்சந்தியில் பஸ்ஸிற்காக காத்து நிற்பதினால் இவ்விடத்தில் பயணிகள் பஸ் தரிப்பிடம் இன்மையால் மழை மற்றும் வெயில் என்பவற்றை பொருட்படுத்தாது மரநிழல்களின் கீழ் பஸ்ஸிற்காக காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளதாகவும், இதனால் நாளந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாணவர்களும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் வீரத்திடல் ஜூம்ஆப் பள்ளிவால், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர்; கழகம், மகளிர் அமைப்புக்கள் போன்ற அமைப்புக்கள் பிரதேச அரசியல் வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்களும், பாடசாலை மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.