கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் – அமீர் அலி

ameer ali

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
கடந்த யுத்த காலங்களில் எவ்விதமான வளங்களும் இல்லாமல் பாடசாலைகளை பொறுப்பேற்று அந்தப்பாடசாலைகளின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் தமது உயர்பங்களிப்பினை நல்கிய கடமை நிறைவேற்று அதிபர்களை அவர்களின் சேவை காலத்தினை கருத்திற்கொண்டு அதிபர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

 
கடந்த காலங்களில் இவ்வாறு பதில் அதிபர்களாக கடமையாற்றியோர்கள் குறிப்பிட்ட அளவு சேவைகாலத்தினை தகமையாக்கொண்டு அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர் அதற்கேற்ப இப்போது அதிபர் சேவை வகுப்பு (111) க்கான பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்.

 
கடந்த யுத்தகாலங்களில் எவ்வித பிரதிபலனையும் பாராமல் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முன் நின்று உழைத்தவர்கள் இந்த கடமை நிறைவேற்று அதிபர்கள் தமது உயிரை பணயம் வைத்து உயிர் அச்சுறுத்தலையும் தாண்டி கடமை புரிந்தவர்கள் அவர்களின் சமூக சேவையும், அர்ப்பணிப்பும் நல்ல கல்விப்பரம்பரையை உருவாக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் அத்தோடு சுயநலம் பாராமல் பணியாற்றிய இவர்களை கௌரவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கொள்ள முடியும் எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை அவர்களின் சேவையின் அடிப்படையில் நிரந்தரமாக்கவும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அசாஹீம்