சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை கைது !

க.கிஷாந்தன்

 

சிறுவனின் கழுத்தில் (9 வயது), சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் 02.03.2016 அன்று மாலை கைதுசெய்துள்ளனர்.

 

IMG_20160303_095308_Fotor

தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சொற்பேச்சை கேட்காததாலும்  குழப்பங்கள் செய்ததாலும்  சிறுவனை, நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனின் தந்தையை 03.03.2016 அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.