இலங்கை வர இருக்கும் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் !

sushma1--621x414
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை வருகின்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களை அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். 

இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 6ம் திகதி வடக்கு சென்று பல்வேறு சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். 

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல்துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. 

இதற்கான முன்னாயத்தங்களை செய்வதற்காக கடந்த 12ம் திகதி இந்திய வெளியுறவு செயலர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், அரசின் உயர்மட்டத்தினரையும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.