சமாதானத்தை நோக்கிய மிகவும் கடினமான பாதையில் இலங்கை – அமெரிக்க ஆலோசகர் தோமஸ் ஷனோன்

shanon_america_002
ஜனநாயகத்திற்குப் புத்துயுர் அளிப்பதற்கு மக்களுக்குப் பலம் உள்ளது என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் எனத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசர் தோமஸ் ஷனோன், இலங்கை சமாதானத்தை நோக்கிய மிகவும் கடினமான நீண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தனது அனுபவங்கள் ஊடாக உலகின் ஏனைய நாடுகளுக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கவேண்டும். அமெரிக்கா வலுவான இலங்கையை எதிர்பார்க்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, 

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் என்ற உயர்பதவியைப் பொறுப்பேற்கவுள்ள இராஜாங்கத் திணைக்கள ஆலோசகராக தற்போது திகழும் தூதுவர் ஷனோன் மேற்படி கருத்துகளை வெளியிட்டார். 

shanon_america_001

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: 

காலஞ்சென்ற பெருந்தலைவர் லக்ஷ்மன் கதிர்காமரை கௌரவித்து அவரது பெயர் சூட்டப்பட்டுள்ள இலங்கையின் தந்திரோபாய நலன்கள் குறித்த கற்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஸ்தாபனத்தில் இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயம். 

இலங்கையின் இந்த நலன்கள் குறித்து கதிர்காமரைவிட நன்கு அறிந்தவர்கள் வேறு எவருமில்லை. அவர் தேர்ச்சிபெற்ற சர்வதேச சிவில் பணியாளர் வெளிவிவகாரங்களில் இணையற்ற நிபுணத்துவம் வாய்ந்தவர். மூன்று தடவைகள் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டவர். 

அவர் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு 10 வருடங்களாகின்றன. எனினும், அனைவரையும் உள்வாங்கும், சமாதான இலங்கை குறித்த அவரது தொலைநோக்கு நாளுக்குநாள் சாத்தியமானதாக உண்மையானதாக மாறிவருகின்றது. 

அது சுலபமான விடயம் அல்ல என்பது கதிர்காமருக்குத் தெரிந்திருந்தது. அவரது சொந்த வார்த்தைகளில், “இது தொப்பிக்குள் இருந்து முயலை வரவழைக்கும் மந்திரவித்தையல்ல. 

சமாதானம் என்பது ஒரேநாளில் உடனடியாக தயாரிக்கப்படப் போவதில்லை. சமாதானம் என்பது நீண்ட பாதை; கடுமையான செயற்பாடு.” எனினும், அந்த நீண்டபாதையில் உங்கள் தேசம் ஏற்கனவே பயணிக்கத் தொடங்கிவிட்டது. 

ஜனவரியிலும், ஓகஸ்டிலும் கடந்த காலங்களின் எரிச்சலூட்டும் தன்மையிலிருந்து விலகி அனைவரையும் உள்வாங்கும் சமாதான, நீதியான, ஜனநாயக மற்றும் வளம்மிக்க எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை உலகம் பார்த்தது. 

ஜனநாயகத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு மக்களுக்குச் சக்தியுள்ளது என்பதற்கான உதாரணம் இலங்கையாகும். தங்கள் தேசத்தின் போக்கை வாக்குப்பெட்டிகள் மூலம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு மக்கள் ஆணையிட்டுள்ளார்கள். 

நாங்கள் தற்போது இலங்கை, ஏனையவர்களுக்கும் புத்துணர்வை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எப்படி மிகவும் கடினமான எதிர்காலத்தைக் கடப்பதற்கும், ஸ்திரமான, வளமிக்க, எதிர்காலத்தை உருவாக்கவும், நாட்டின் பாதுகாப்பு, வளம், கௌரவம் என்பவற்றைப் பலப்படுத்தவும் நீதியும், கருணையும் உதவமுடியும் என்பதையும் இலங்கை காண்பிக்கமுடியும். 

அமெரிக்கா வலுவான இலங்கையை காணவிரும்புகின்றது. சர்வதேச சமூகத்திற்குத் தலைவராகவும், சர்வதேச பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும், மனித உரிமைகள் மற்றும் நீதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாக்கும், சர்வதே சட்டங்களை பின்பற்ற உதவும் இலங்கையை காண விளைகின்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமெரிக்கா உறுதியாக ஆதரிக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகியுள்ளோம் என்றார்.