பஸ்ஸில் தவறவிட்ட 14 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்த சாரதிக்கும் நடத்துனருக்கும் நிமல் பாராட்டு !

பஸ்ஸில் தவறவிடப்பட்ட பதினான்கரை இலட்சம் ரூபாவை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 

nimal srip

இன்று காலை அவர்கள் இருவரையும் போக்குவரத்து அமைச்சுக்கு வரவழைத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விஷேட பரிசில்களையும் வழங்கியதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

அண்மையில் பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி சென்ற அரச பஸ் ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் பதினான்கரை இலட்சம் ரூபாவுடனான பயணப் பொதியை மறதியாக தவறவிட்டு சென்றிருந்தார். 

இந்நிலையில் குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் உரியவரை தேடிச் சென்று அந்தப் பணத் தொகையை மீண்டும் ஒப்படைத்திருந்தனர். 

இந்த செயற்பாடானது வரவேற்கத்தக்கது என்றும், இது அரச போக்குவரத்து சேவையின் தரத்தை பாதுகாப்பதற்கான முன்மாதிரி என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.