மாணவர்கள் மீதான தாக்குதல் – இவ் வாரத்துக்குள் அறிக்கை !

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இவ் வாரத்துக்குள் பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, அக் குழுவின் தலைவர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். 

இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது, பொலிஸாரால் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இது குறித்து ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

இந்தக் குழுவின் தலைவராக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவு செய்யப்பட்டதோடு, சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன மற்றும் பிரதீபா சேனசிங்க ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாகும்.