சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான முயற்சியில் இடைவெளியொன்றை ஏற்படுத்தி உள்ளது !

Maaduluwave Sobitha
ஜெம்சத் இக்பால் 
இலங்கையில் ஊழலும், மோசடியும் அற்ற நல்லாட்சி உருவாக வேண்டுமென்று  அயராதுழைத்த கோட்டே நாகவிஹாரையின் பிரதம குரு மாதுலூவாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான முயற்சியில் இடைவெளியொன்றை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோட்டே நாகவிஹாரையின் பிரதம குருவும்;, சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவருமான மாதுலூவாவே சோபித தேரர், சிங்கப்பூரில் காலமான செய்தி கேட்டு  அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன்.
இவ்வாண்டு ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் மலர்ந்த நல்லாட்சிக்கு வழிகோலியவராக மறைந்த தேரர் மதிக்கப்படுகின்றார். அத்துடன் நான்கு தசாப்தங்களாக இந்நாட்டு மக்களுக்கு நேர்மையான ஆட்சி மற்றும் சிறப்பான சமூகக்கட்டமைப்பு என்பவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்திருக்கின்றார். அநீதிகளுக்கெதிராக அவர் வீதியில் இறங்கிப் போராடியிருக்கின்றார். 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய தெளிவான விளக்கம் அவருக்கு இருந்தது. அன்னாரிடம் நாம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளைப் பெற்று வந்துள்ளோம். அண்மையில் நாம் அவருடன் கோட்டே நாகவிஹாரையில் நடாத்திய கலந்துரையாடலின் போது நல்லாட்சி மலர்ந்தும் கூட, அதனால் எதிர்பார்க்கப்படும் அரசியல் மாற்றங்கள் போதியளவு ஏற்பட்டதாக தெரிவில்லையென எங்களிடம் அவர் விசனம் தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகியிருந்த மறைந்த தேரரின் உடல் நலனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி வந்தனர்.
நாட்டில் பொதுவாக சிறுபான்மை மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் எதிராக சிங்கள பௌத்த தீவிர இனவாத சக்திகள் சில தலைதூக்கியுள்ள காலகட்டத்தில் சோபித தேரர் போன்ற நேர்மையாகச் சிந்தித்துச் செயல்படும் சமய குருமாரின் நடுநிலையான அணுகுமுறை பெரிதும் மெச்சத்தக்கது.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தமது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.