கிழக்கு மாகாண உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபை !

அஸ்லம் . எஸ். மௌலானா 
இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கான உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆசிய மன்றத்தின் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் இக்கூட்டம் இடம்பெற்றது.
food-1_Fotor
இதில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், இம்மாவட்டங்களின் பிரதம உணவு பரிசோதகர்கள், அம்பாறை மற்றும் கல்முனை உள்ளிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாகாண பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண உணவு பாதுகாப்பு ஆலோசனை சபை நிறுவப்பட்டதுடன் அதன் கீழ் செயற்படும் வகையில் மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களுக்கான உணவுப் பாதுகாப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன.
food-4_Fotor
இவற்றின் மூலம் அந்தந்தப் பிராந்தியங்களின் உணவுக்கட்டுப்பாடு மற்றும் நடைமுறைகளை அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள உணவு ஸ்தாபனங்களில் உணவு நஞ்சாதல், உணவுகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தல், சுகாதாரமான நீரை பயன்படுத்தல் மற்றும் அவை குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு மேலும் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாக ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
இலங்கையில் இவ்வாறான உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று முதன்முறையாக கிழக்கு மாகாணத்திலேயே நிறுவப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.