கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதனை அச்சுறுத்தி ஒருவர் !

(எஸ்.அஷ்ரப்கான்)

 

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதனை அச்சுறுத்தி ஒருவர் இன்று (13) பிரதேச செயலகத்துக்கு வருகைதந்து மன்னிப்பு கோரினார்.

இந்தவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிரதேச செயலாளரின் கடமைகளை நிறைவேற்றவிடாது இதற்கு முன்னர் கடமையாற்றிய பிரதேச செயலாளரை எவ்வாறு பொம்மை கட்டி எரித்து அனுப்பினோமோ அவ்வாறே தாங்களையும் அனுப்பவேண்டி வரும் என்றும் கடந்த காலங்களில் பிரதேச செயலாளர்கள் எவ்வாறான விபரீதங்களை எதிர்நோக்கினார்களோ அதேபோன்று விபரீதங்களை தாங்களும் எதிர்நோக்கவேண்டி வரும் என்றும் கல்முனை -01 ஏ கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் சுப்ரமணியம் நாகேந்திரன் என்பவர் மேற்படி பிரதேச செயலாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

 

பிரதேச செயலாளர் இது தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டபோது குறித்த சந்தேக நபரான கல்முனை -01 ஏ இல் வசிக்கும் சுப்ரமணியம் நாகேந்திரன் என்பவர் நேரடியாக பிரதேச செயலகத்துக்கு வருகைதந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரினார். இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் கூறினார்.

 

தற்போது நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் காணப்படுகிறது. சட்டம், ஒழுங்கு, நிர்வாகம் என்பன மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க சுதந்திரமாக செயற்படுகிறது. இன்னிலையில் நிர்வாக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பது பாரிய குற்றமாகும். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். எனினும் குறித்த சந்தேக நபரின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்று பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.