பொத்துவிலில் 22 மீனவர்கள் பொலிசாரினால் கைது !

 எம்.ஏ. தாஜகான்

DSCN1514_Fotor

 பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி கரைவலையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டின் பேரில் 22 மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். 

பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கரையோர மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்றொழில் தினைக்களத்தின் அதிகாரிகள் இன்று(14)சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுதே ஒரு தொகுதி மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். 

DSCN1518_Fotor

 சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டில் மீனவர்களை கைதுசெய்கின்ற பொழுது பல்வேறுபட்ட எதிர்ப்புக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மீனவர்களின் குடும்பப் பெண்மணிகள் வீதிகளை மறித்து கண்ணீருடன் கதறியழுதனர். 

DSCN1524_Fotor

அங்கு மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்ற பொழுது: 30 வருடகாலமாக கடற்றொழிலில் மீன்பிடித்து வந்த எம்மை அனுமதிபத்திரமில்லை எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்து எமது மீனவ உடைமைகளையும் பறிமுதல்செய்தமை ஏற்றுக்கொள்ள முடியாது. மீன்பிடித்தொழிலைத்தவிர வேறு எந்தத்தொழிலும் எமக்குத் தெரியாது. எமது குடும்பம் இனி எவ்வாறு வாழ்க்கை நடாத்துவது.நல்லாட்சியில் மக்களுக்கு இத்தகைய செயற்பாடு நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்கள். 

மீனவர்களின் பல்வேறுபட்ட எதிர்புகளுக்கு மத்தியிலும் பொலிசார் 22 மீனவர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கூலித்தொழில் செய்யும் மீனவர்களாவார்கள்.