முஸ்லிம் என்ற காரணத்துக்காக பாடசாலை அனுமதி மறுப்பு !

கலீல் எஸ் முஹம்மத்

2016 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதிக்காக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் விண்ணப்பித்திருந்த மாணவனுக்கு அவர் பின்பற்றும் சமயம் இஸ்லாம் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாணவனின் தந்தை ஏ எம் ஏ இர்சாதுக்கு 12.09.2015 திகதியிடப்பட்ட குறித்த பாடசாலை அதிபரினால் கையொப்பமிட்டு இவ் அனுமதி மறுப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

unnamed_Fotor

கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 23/2013 பந்தி 3:2 இன் படி இப்பாடசாலையில் இந்து சமயத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தரம் 1 இல் அனுமதிக்கப்படுவர் என்பதால் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது எனவும் தாங்கள் விண்ணபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமயம் இஸ்லாம் எனவும் அதிபர் ஐ.ராசரத்தினம் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார்.

மேற்படி 23/2013 சுற்று நிருபம் 3:2 பந்தியானது பின்வருமாறு குறிப்பிடுகிறது;

1960 இன் 5ஆம் இலக்க மற்றும் 1961 இன் 8ஆம் இலக்க உதவிபெறும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற போது இப்பாடசாலையானது இந்து சமயத்தை சேர்ந்த மாணவருக்கு மட்டுமானது என்கிற காரணத்தை காட்டி இன் நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது.

எது எவ்வாறு இருந்த போதிலும் இவ்வாறான சுற்று நிருபங்களை காட்டி ஒரு மாணவனின் கல்வி கற்பதற்கான அடிப்படைஉரிமை மறுக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மற்றும் இன அடையாளத்தை அல்லது மத அடையாளத்தை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி மனித மனங்களிடையே கசப்புணர்வை ஏற்ப்படுத்தும் இவ்வாறன நடவடிக்கைகள் களையப்படல் வேண்டும்.

Hidu college_Fotor
கடந்த பல வருடங்களாக கொழும்பில் முஸ்லிம்களுக்கென்று அரச பாடசாலை இல்லாததன் குறை பல தடவை சுட்டிக்காட்டப்பட்டு வந்த போதிலும் எந்த ஒரு அரசினாலும் இது கருத்தில் கொள்ளபடாத சூழ் நிலையே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் என்றும் தாங்கள் சாணக்கியர்கள் என்றும் தம்மை தாமே புகழ் பாடித்திரியும் தலைவர்கள் கொழும்பு வாழ் முஸ்லிம்களின் கல்வி நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து எவரும் கவலை கொள்ளாதிருப்பதும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை தரும் விடயமாகும்.

மலர்ந்திருக்கும் புதிய நல்லாத்சியிலாவது இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமா? முஸ்லிம் அரசியல் தலைமைகளே இது உங்களின் கவனத்துக்கு!