மீனவப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை – யாழ் மீனவர்கள்

இந்திய-இலங்கை மீனவப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

207966761fish 

இந்தியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய பிரமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இருதரப்பு மீனவர் சங்கங்களும் தொடர்ந்து முயற்சி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினை என்பதால் மனிதநேய நோக்கில் அணுகும்படி வலியுறுத்தினார். 

இந்நிலையில், இலங்கை வடமாகாண மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கூட்டுறவு சங்கத் தலைவர் எமிலியாம் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

வடக்கு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்பாக இரு நாட்டு மீனவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. 

2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த் தையின்போது, மாற்றுத் தொழில் செய்வதாக தமிழக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். அதை நடைமுறைபடுத்தாமல் தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி யாழ்ப்பாணம் பகுதிக்குள் வருகிறார்கள். 

தமிழக மீனவர்கள் கடந்த சில வாரங்களாக எல்லையை கடந்து சுண்டிக்குளம், தாளையடி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியுள்ளனர். 

தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவு எனக் கூறிக்கொண்டு அந்த உறவை இழுவை படகுகளில் போட்டு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நாம் செல்லத் தயாராக இல்லை. 

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை கட்டுப்படுத்தினால் இருநாட்டு மீனவப் பிரச்சினை தீர்க்கப்படும். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அலுவலகம் ஆகியவற்றை மீனவர்கள் வரும் 23-ம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர் என்றார்.