நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தி

imageஷபீக் ஹுசைன்

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் மத்தியில் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாதவை. அதற்காக இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போமாக!

இவ்வாறு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
புனித ரமழான் நோன்பை நோற்று, தொழுகை, திருகுர்ஆன் பாராயணம் ஆகிய ஆன்மீக மேம்பாட்டிற்கான சன்மார்க்க கடமைகளில் அதிகம் ஈடுபட்ட பின்னர், ‘ஈதுல் பித்ர்’ ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
புனித நோன்பு பாவக்கறைகளை அகற்றி முஸ்லிம்களை புடம் போட்டிருக்கின்றது. அத்துடன், வசதி படைத்தவர்கள் இன்னொரு கட்டாயக் கடமையான ஸக்காத்தை அவற்றைப் பெறுவதற்கு உரியவர்களுக்கு வழங்குவதிலும் இந்த மாதத்தில் அதிக கரிசனை காட்டுவதும் வழக்கமாக இருந்துவருகின்றது.

பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் மீண்டுமொரு பெருநாளை சந்திக்கின்றோம். இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பாக நமது சமூகம் அனுபவித்துவரும் சோதனைகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் விடுபட்டு, ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுபீட்சமான எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியிருக்கின்றது.

இந்நாட்டைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் நீங்குவதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தல் வழிவகுக்குமென்று நம்புகின்றோம். நாட்டில் நல்லாட்சி நிலவவேண்டும் என்றும் அபிவிருத்தி அடைய வேண்டுமென்றும் மக்கள் எதிர்பார்கின்றனர். அதற்கான காலம் கனிந்து விட்டது.

எல்லாவற்றும் மேலாக, பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் மத்தியில் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாதது. அதற்காக இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போமாக!

ரவூப் ஹக்கீம்
தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்.