செனட்டர் மசூர் மௌலானாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Mashoor-Moulana-4-150x150
அஸ்லம் எஸ்.மௌலானா
எமது நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியின் ஸ்திரத்தன்மைக்காகவும்  உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்காகவும் இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். அரபு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதானது புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருப்பதுடன் பாரிய சவாலாகவும் அமைந்துள்ளது.
உள்நாட்டில் தலை தூக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி அங்கெல்லாம் அக்கிரமங்களை அரங்கேற்றி வருகின்றன. குறிப்பாக அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
அதேவேளை எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் நல்லாட்சியின் உதயத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நல்லாட்சி நீடித்து நிலைக்குமா என்கின்ற பாரிய சந்தேகமும் அச்சமும் இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது. ஆகையினால் இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
அத்துடன் அரசியல் மற்றும் மார்க்க கொள்கை வேறுபாடுகளைக் களைந்து தேசிய ரீதீலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- பலமடைவதற்கும் தேசிய ஐக்கியத்துக்காகவும் நிரந்தர சமாதானத்திற்காகவும் உழைப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.