சந்திரிகாவுக்கும் ரணிலுக்குமிடையே 5 வருடத்துக்கான ஒப்பந்தமே உள்ளது : டலஸ் !

753393888dullas-alahapperuma2

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள அபயாராம விகாரையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சீர்குலைக்கும் நோக்கத்திலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா செயற்படுகின்றார். அவர் இதற்காக யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டுச் சேர்வார்.

தன்னை ஆடையின்றி வீதியில் ஓட விடுவேன் என கூறியவருடன் வேண்டுமென்றாலும் இணைந்து செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

மைத்திரிக்கும்  ரணிலுக்குமிடையே 100 நாள் ஒப்பந்தமே உண்டு. ஆனால் சந்திரிகாவுக்கும் ரணிலுக்குமிடையே  5 வருடத்துக்கான ஒப்பந்தமே உள்ளது. அவர் கட்சிகளைப் பிரிக்க முயற்சிக்கின்றார்.

அவர் ஓய்வுபெற்றுவிட்டார் என அவராலேயே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் தொடர்ந்தும் அரசியலுக்குள் இருந்துகொ டு கட்சிகளைப் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்.

தயவு  செய்து கட்சிகளைப் பிரிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி கூறியதைப் போல் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்வதுடன், ஜே.ஆர். ஜெயவர்தனவிடமிருந்து அதற்கான பாடத்தைக் கற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.