எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து நாட்டில் சமூக, பொருளாதார , அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர தான் அர்ப்பணத்தோடு உள்ளேன் – ஜனாதிபதி

Maithri3

 அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலகில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உழைத்த எந்தவொரு அரசியல்வாதியும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய உயிர்களையும் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து நாட்டில் சமூக, பொருளாதார , அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர தான் அர்ப்பணத்தோடு உள்ளேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தம்பதெனியவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில்;

நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை. அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நான் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக 49 அமைப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்தேன்.

ஒரு பிரதமர் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தெரிவு செய்யப்படலாம். அதற்குப் புதிய திட்டங்களும் சிந்தனைகளும் மக்களுக்கான அர்ப்பணமுமே உண்மையில் தேவையாகும்.

பிரிவினை அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்டி ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன் எல்லா புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து மக்களின் நன்மைக்காக அர்ப்பணத்துடன் செயற்படுவது எல்லோருடையதும் பொறுப்பாகும் என்றார்.

அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் சாந்த பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.