அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிகாகோவில், அடுத்த மாதம், 19 – 22ல் நடக்கும் கட்சியின் மாநாட்டில் அவர் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி வாத நிகழ்ச்சியில், டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறினார். இதைத் தொடர்ந்து, அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, அவருடைய கட்சியில் பலரும் குரல் கொடுக்கத் துவங்கினர்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து, ஜோ பைடன் விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன்.

எஞ்சியிருக்கும் என் பதவி காலம் முழுவதும், அதிபராக எனது கடமையை நிறைவேற்றுவேன். இதுவே என் கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியிலும் அவருக்கு ஆதரவு உள்ளதால், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.