நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும் – ஜனாதிபதி

நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்: நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மக்களை அடக்கி ஒடுக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு கொண்டு வரப்படுகின்றதென தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் வதந்திகளை நாம் அடியோடு மறுக்கின்றோம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பின்னர்தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியிடமுடியும். சட்டவரைவில் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும்.

அதைவிடுத்து அந்த சட்டவரைவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதும், நிர்வாக முடக்கல் நடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நிர்வாக முடக்கலானது மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிர்வாக முடக்கலை முன்னெடுப்பதற்கு மற்றொரு பிரதான காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கலை தமிழ்க் கட்சிகள் குறிப்பிடுகின்றனவே என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, தமிழ்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பில் உரிய கவனம் செலுத்துவோம். வடக்கு – கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.