தலைமைத்துவத்திற்கு விடை கொடுக்கிறார் திமுத்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்குப் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் இன்றைய தினம் (20.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.