வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை, மேலும் வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரசாங்க அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் அரசாங்க அச்சகம் உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால், எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.