எமது வாக்குகளால் நீர் வழங்கள் அமைச்சரானார்: ஆனால் நீர் இன்றி தவிக்கின்றோம் !

df5965d9g5fdf

 எங்களது வாக்குகளால் தெரிவானவர் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தும் குடிநீரின்றி உயிர்விடும் நிலையிலேயே எங்களது கிராம மக்கள் உள்ளனர்.

நீண்டகால பிரச்சனையாக இருக்கும் கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சனைக்கு இந்த அரசியல்வாதிகள் இன்றுரை ஒரு நிரந்தர தீர்வை காணாமல் உள்ளார்கள்.

இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனை கிராம மக்கள் மிகவும் மனவேதனையுடன் கூறுகிறார்கள்.

கல்முனையின் மேற்கே உள்ள நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு கிராமங்களில் நீர்ப்பிரச்சனை நீண்டகால தொடர்கதையாகவே இருந்துவருகிறது. 

இங்குள்ள கிணறுகளில் நீர் ஊறுவது குறைவு. கிணறுகள் அனேகமாக வற்றியே காணப்படும். இக்கிராம மக்கள் நீர் இணைப்பு நீரையே பயன்படுத்திவருகின்றார்கள்.

கடந்த ஒரு வாரமாக நீர் இணைப்பு மூலமும் கிடைக்கும் நீரும் முற்றாக தடைப்பட்டுள்ளதால் இப்பிரதேச மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பாக இம்மக்கள் மேலும் கூறுகையில்,

நீரின்றி எங்கள் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றோம். நீண்டகாலமாக எங்களது நீர்ப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. ஓரளவுக்கு நீர்இணைப்பு மூலம் கிடைத்த நீரும் இந்த வாரம் தடைப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவிக்கின்றோம்.

பொறுமையிழந்து இன்று வீதிக்கிறங்கி வேறு இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நீர்கொள்கலன் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதிலிருந்து நீரைப் பெற்றுள்ளோம்.

இத்தனை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இருந்தும் எங்கள் பிரதேச மக்களின் நீண்டகாலமாக நீர்ப்பிரச்சனை இதுவரை நிரந்தரமாக தீர்க்கப்படவில்லை. 

இந்த வாரம் முற்றாக நீர் தடைப்பட்டுள்ளதால் நீருக்காக வீதிக்கிறங்கி போராடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே வாக்கு கேட்டுவரும் எங்கள் அரசியல்வாதிகள் எங்களது நீர்ப்பிரச்சனைக்கு முதலில் தீர்வு காணவேண்டும். முஸ்லிம்கள் நாங்கள் வாக்களித்த கட்சியைச் சேர்ந்தவர் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருக்கிறார். அவராவது தீர்ப்பாரா எங்கள் பிரச்சனையை என்று பார்ப்போம் என்றனர். 

நன்றி வீரகேசரி