கொரோனாவால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் பக்கச்சார்புள்ள தீர்மானங்கள் எடுக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கின்றது-எச்.எம்.எம்.ஹரீஸ்


கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்குவதற்கு உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் இருக்கும் நாடுகளில் அனுமதிக்கும்போது சுகாதார அமைச்சின் தொழிநுட்பக்குழு இதுதொடர்பாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவது கவலையளிக்கின்றது என எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 

 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொராரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின்  உடல் அடக்கம் செய்வது சம்பந்தமாக  அரசாங்கத்தில் இருக்கும் எமது தலைவர்கள் அமைச்சரவையில் பலதடவைகள் பேசி அதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றபோதும் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு இது சம்பந்தமாக எதிர்ப்பினை தெரிவித்து, அந்த முடிவினை தள்ளிப்போட்டிருக்கிறார்கள்.  

 உண்மையில் உலகில்  தலை சிறந்து விளங்குகின்ற விஞ்ஞானிகள் இருக்கும் அமெரிக்கா, ரஷியா உட்பட 200க்கும் அதிகமான நாடுகளில் இவ்வாறான உடல்களை அடக்குவதற்கு  அங்குள்ள நிபுணர்கள் அனுமதியளித்துள்ளனர். அவ்வாறு இருக்கும்போது எமது நாட்டில் மாத்திரம் இந்த ஜனாசாக்களை அடக்குவதற்கு தொழிநுட்பகுழு ஒருதலைப்பட்சமாக செயற்பட்டுவருவது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களி மூலம் வெளியேறும் மலசலம் மற்றும் ஏனைய கழிவுகள் நீருக்கு செல்கின்றன. அவை மரணிக்கும் சடலங்களைவிட பாரதூரமானது என ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஒருவர் தெரிவிதிருக்கின்றார். 

அதனால் மரணிப்பவரை அடக்குவதால் அவரில் இருக்கும் வைரஸ் நீரில் கலந்துவிடும் என்ற அச்சம் இருக்குமாக இருந்தால், அதனை ஒரு பெட்டியில் அடைத்து நீர்மட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் அடக்கலாம். குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மேல் நில பிரதேசங்களில் இந்த ஜனாசாக்களை அடக்குவதற்காக வசதிகளை செய்துகொடுக்க அந்த பிரதேச ஊர் தலைவர்கள் முன்வந்திருக்கின்றனர்.

எனவே மரணிப்பவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்கு எங்களுடைய இந்த நாட்டின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தலையிட்டு இந்த தீர்வை பெற்றுத்தர வேண்டும். குறிப்பாக இது சம்பந்தமாக அரசின் அமைச்சரவையில் உள்ள உயர் தலைவர்கள் இதுசம்பந்தமாக சாதகமான முடிவுகளை எடுத்தாலும், கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க தடையாக இருப்பதுபோன்று இந்த நடவடிக்கை இருந்து கொண்டிருக்கின்றது. எனவே அரசாங்கம் அவசரமாக இந்த விடயத்தில் தலையிட்டு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்