மாடறுப்புக்கு எதிரான பிரேரனை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின் நீதி மன்றத்தை நாடுவோம்.

மாடறுப்புக்கு எதிரான பிரேரனை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின் நீதி மன்றத்தை நாடுவோம். – சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ அறிவிப்பு

இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வகையில் இன்று (29.09.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

அடுத்ததாக, குறித்த பிரேரனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றில் பிரேரனை சமர்பிக்கப்பட்ட பின்னர் குறித்த பிரேரனைக்கு எதிராக நீதி மன்றத்தை அனுகுவதற்கான அவகாசம் கிடைக்கும்.

ஒவ்வொரு மனிதர்களும் என்ன உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும். அதில் அரசோ எந்த தனி மனிதர்களோ தலையீடு செய்ய முடியாது என்ற வகையில் மாடறுப்பு பிரேரனை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டால் நீதி மன்றத்தை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ நாடும் என்று ஏற்க்கனவே நாம் அறிவித்திருந்தோம்.

அந்த அடிப்படையில் பாராளுமன்றில் குறித்த பிரேரனை முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதி மன்றம் செல்வதற்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ தயாராக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறோம்.

மாடறுப்பு தடை என்பது ஒரு சமூகத்தின் மத உரிமையில் கைவைப்பது மாத்திரமன்றி இலங்கை நாட்டுக்கும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கும் காரியமாகும் என்பதை ஆளும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

மாடு வளர்க்கும் விவசாயிகள் பெரும்பாலும் பெரும்பான்மை இன சகோதரர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சொற்ப அளவில் சிறுபான்மை சகோதரர்களும் மாடு வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள்.

மாடு வளர்ப்பில் ஈடுபடும் ஒருவர் மாடு பால் தரும் நிலையில் இருக்கும் வரையில் தான் அதனை பயன்படுத்துவார். பால் தராத முதிய வயதை அடையும் போது அதனை இறைச்சிக்காக விற்றுவிடுவார்கள். இலங்கையில் மாடறுப்புக்கு தடை கொண்டுவரப்பட்டால் மாடு வளர்க்கும் அப்பாவி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திப்பதுடன், உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதே வேலை, உள்நாட்டில் மாடறுப்பை தடை செய்து விட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது உள்நாட்டு உணவுப் பொருட்கள் கடும் விலையேற்றத்தை சந்திப்பதுடன், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி பொருட்களும் விலையேற்றத்தை சந்திக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்நிலையில் தற்போது பிரதமர் சார்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன் பின்னர் அரசு குறித்த யோசனையை பாராளுமன்றில் சமர்பித்தால் சட்ட ரீதியாக உரிமை கேட்டு நீதி மன்றுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ கண்டிப்பாக நீதி கேட்டு மனுத் தாக்கல் செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

R. அப்துர் ராசிக் B.Com
பொதுச் செயலாளர்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ
29.09.2020