பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

 

ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு  சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை   இன்று (12) வட மாகாணத்தின்  பல பிரதேசங்களில்; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வௌ்ளைப் பச்சையரிசியை 62 ரூபாய்க்கும் 74 ரூபாயாகக் காணப்படும் நாட்டரிசி ஒரு​ கிலோகிராமை 70 ரூபாய் வரையிலும் குறைத்துள்ளதாக, அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் பொன்னிச் சம்பாவின் விலை, 78 ரூபாயிலிருந்து 71 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ள அதேவே​ளை, ஒரு கிலோகிராம் சீனியின் விலை, 107 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. ​

மேலும், 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், 135 ரூபாய்க்கும் 425 கிராம் நிறையுடைய டின்மீன், 149 ரூபாயிலிருந்து 127 ரூபாய் வரையியும் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை, நாடு முழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும், மற்றும் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளிலுள்ள நடமாடும் சதொச லொறிகளிலும் எவ்வித தட்டுப்பாடுமின்றிப் பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.