புகைத்தலுக்கு எதிரான சர்வதேச விருதினை மூன்றாவது தடவையாகவும் பெற்றுக் கொண்ட இலங்கை

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனி ஆட்களை கௌரவித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.கொழும்பில்  நேற்று  இடம்பெற்ற நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங்கினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த விருது கையளிக்கப்பட்டது.

பின்னர், புகையிலை, மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோனிடம் ஜனாதிபதி அந்த விருதை கையளித்தார்.மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பில் இலங்கை இன்று உலகில் முன்மாதிரி நாடாகத் திகழ்வதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய கிழக்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விருது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த போது 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.பின்னர், 2016ஆம் ஆண்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவுக்கு அந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.