செளதி அரேபியாவின் ஊழல் எதிர்ப்பு உயர்மட்ட குழுவின் தொடரும் அதிரடி நடவடிக்கை

கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டாலர் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செளதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக தற்போது 201 பேர் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்கிறார் ஷேய்க் செளத் அல்-மொஜீப்.

யாரெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறார்கள் என்ற பெயர் விவரத்தை அவர் வெளியிடவில்லை, ஆனால் சில மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள தொழிலதிபர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

”இந்த தவறுகளை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரம் வலுவாக உள்ளது,” என்கிறார் ஷேய்க் மொஜீப்.

அதேசமயம், ஊழலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளால் செளதியில் வர்த்தக நடவடிக்கைகளில் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்திய மொஜீப், பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் சொந்த வங்கிக் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

32 வயதாகும் செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு உயர்மட்ட குழுவின் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவதாக மொஜீப் தெரிவித்துள்ளார்.

இதுவரை விசாரணைக்காக 208 தனிநபர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் மட்டுமே குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மொஜீப் அறிவித்தார்.