அட்டன் நோக்கி பயணித்த இ. போ. சபைக்கு சொந்தமான பஸ் குடைசாய்ந்து பலர் காயம்

க.கிஷாந்தன்

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 05.11.2017 அன்று மாலை 3.30 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 28 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 28 பேரில் 6 பேர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு மாற்றப்பட்டவர்கள் பெண் ஒருவர், நான்கு ஆண்கள், ஒரு குழந்தை என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.