அரச அதிகாரிகள் எவ்வாறு 50 மில்லியன் ரூபா செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பிய மஹிந்த

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. 

அரச அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போவது பிரச்சினைக்குறிய விடயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

இன்று காலை தலதா மாளிகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

நேற்று மாலை பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் ஊடகவியலாளர்கள் இதன்போது மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்கு பதிலளித்த அவர், அரச அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக மீண்டும் பரிசீலித்து பார்க்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார். 

அதேவேளை லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து வியப்படைந்ததாக கூறிய அவர், அரச அதிகாரிகள் எவ்வாறு 50 மில்லியன் ரூபா செலுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.