காணிகளை விடுவித்தல் : றிசாட்டின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு மீண்டும் மன்னார் வருகை தரவுள்ளனர்

ஊடகப்பிரிவு

வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில்  ஆராயும் ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழு மன்னார் மாவட்டத்திற்கு மீண்டும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலகப் பிரதேச செயலகங்களுக்கு வருகைத் தரவுள்ளனர்.

இந்த வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதியினால் ரஷ்யாவில் வைத்து மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, மாவில்லு, வெப்பல், பெரிய முறிப்பு வனாந்தரங்களை ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தரமாக பிரகடனம் செய்து விஷேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களினால் இந்த வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யக்கோரி போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இது குறித்து கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியினை சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளினால் விஷேட வர்த்தமானியின் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து முன்வைக்கப்பட்ட வேண்டுகோளினையடுத்து ஜனாதிபதியினால் இவ்விஷேட குழு அமைக்கப்பட்டதுடன் போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 இக்குழுவினர் கடந்த மாதம் அப்பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் கருத்துக்களை அறிந்ததாகவும், இது தொடர்பிலான அறிக்கையினை கடந்த மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் இக்குழுவினர் சமர்பிக்க இருந்த நிலையில், அப்பிரதேச மக்கள் உடனடியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பிரிதொரு தினத்தை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் வேண்டியிருந்தனர்.

இதற்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியை சந்தித்து மக்களின் இந்த கோரிக்கையினை முன் வைத்ததுடன், எழுத்து மூலமான வேண்டுகோளினையும் சமர்ப்பித்திருந்தார். 

எனவே இந்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுள்ளதாகவும் இம்மாதம் 21 ஆம் திகதி வரை அந்த காலத்தினை நீடிப்பு செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள்,கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள்,மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து இந்த மக்களின் நியாயமான கோறிக்கைகளை வருகைத்தரவுள்ள மேற்படி குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.