SLMC செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள அல்லது கேட்டுப் பெற வைத்த சூழ்நிலையை ஏற்படுத்தியது எது?

பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர்)

2015 இல் செய்யப்பட்ட கட்சி யாப்புத்திருத்தத்திற்கு அமைவாக உச்ச பீடத்திடமிருந்து தலைவர் புடுங்கி எடுத்துக்கொண்ட அதிகாரத்தின் பிரகாரம் தலைவரால் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ காதர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

பிரதிச் செயலாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் செயலாளராகவும், செயலாளராக இருந்த மன்சூர் ஏ காதர் பிரதிச் செயலாளராகவும் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

                                                                                             File image

இதுவரை காலமும் தற்காலிகமாகச் செயலாளர் பதவியிலிருந்த மன்சூர் ஏ காதர் பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தலைவரே இன்றைய வீரகேசரிப் பத்திரிகைக்குச் சொல்லியுள்ளார்.

கட்சி யாப்பில் தற்காலிகச் செயலாளர் என்றொரு பதவி இல்லை என்பதும், ஒரு பதவியைத் தற்காலிகமாக இரண்டு வருடங்களுக்கு அதிகமாக ஒருவரை எந்த நிறுவனமும் வைத்திருப்பதில்லை என்பதும் தவைவருக்குத் தெரியாதா அல்லது வழமை போல உச்சபீடத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தனது புழுகு மூட்டையை அவசர அவசரமாக அவிழ்த்துவிட்டுள்ளாரா?

சல்மானைத் தற்காலிகமாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்திருக்கிறேன் என்று மக்களுக்குப் பொய் சொல்லிவிட்டு ஐந்து வருடங்களும் தொடர சல்மானுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்ததைப் போல ஒரு தேவை மன்சூர் ஏ காதர் விடயத்தில் ஏற்பட்டிருக்கவில்லையே! இது மட்டுமன்றி காதர் செயலாளராக இருந்த இரு வருடங்களும் காரியப்பர் பிரதிச் செயலாளராகத்தானே இருந்தார்.

காதரைத் தற்காலிகமாக நியமித்து வைத்து அவருக்குக் கீழ் பிரதியாக இருந்த ஒருவரைத் திடீரெனச் செயலாளராக நியமிக்கும் தேவை என்ன இக்கட்டினால் ஏற்பட்டிருக்கக் கூடும்? 2015 இலேயே காதரைத் தவிர்த்து காரியப்பரைச் செயலாளராக நியமிக்க எந்தத் தடையும் இருக்கவில்லையே!

இரண்டு முழு வருடங்களிலும் இரண்டு தடவைகள் மன்சூர் ஏ காதர் தற்காலிகமாக நியமிக்கப்படவில்லை. மேலும் உச்சபீடத்தில் இவர் தற்காலிகமாகவே செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று என்றுமே தலைவர் அறிவித்ததில்லை.இது மட்டுமல்ல புதிய யாப்பின்படி செயலாளரை மட்டுமே தலைவர் நியமிக்கலாம் பிரதிச் செயலாளரை உச்சபீடமே நியமிக்கவேண்டும். ஆயினும் தலைவரே கட்சி யாப்பை மீறி, பிரதிச் செயலாளராக காதரை நியமித்துள்ளது மட்டுமன்றி
அவரே இந்நியமனத்தைப் பற்றி பத்திரிகைக்கு அறிக்கையுமிட்டுள்ளார்.

புதிய கட்சி யாப்பினடிப்படையில் செயலாளராகப் பதவி வகிப்பவர் எந்தத் தேர்தல்களிலும் போட்டியிட முடியாது.காரியப்பர் பல தேர்தல்களில் போட்டியிட்டவர், கல்முனை மாநகர மேயராகப் பதவி வகித்தவர். அண்மையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கிற ஒரு சூழலில் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்கையில் இருக்கும் காரியப்பரை, எந்தத் தேர்தலிலும் பங்கு பற்றும் விருப்பற்றிருந்த காதருக்குப் பதிலீடாக நியமிப்பதற்கு உந்தித் தள்ளிய ஆபத்தான காரணி எது? காரியப்பர் இந்நியமனத்தை ஏற்றுக்கொள்ள அல்லது கேட்டுப் பெற வைத்த சூழ்நிலையை ஏற்படுத்தியது எது?

காரியப்பர் தாறுஸ்ஸலாம் தொடர்பான நீதி விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.பொலிஸ் மோசடிப் பிரிவு கோட்டை மெஜிஸ்ட்ரேட் நீதி மன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளது. மோசடிப் பிரிவு காரியப்பரை அழைத்து உறுதிப் பத்திரம் தொடர்பாக விசாரித்துள்ளது.அடுத்த விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மோசடிப்பிரிவு ஆவணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். நீதிக்கு முகம் கொடுப்பது கடினமாக உள்ளதாக அறிய முடிகிறது.

எனவே, இது விடயத்தில் உயர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காரியப்பருக்கு கட்சியில் உயர்ந்த பதவி ஒன்றை வழங்கி அவரை அரசில் உச்ச பதவி வகிப்பவர்களிடம்ஞசந்தைப்படுத்த

வேண்டும். எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கு இருக்கும் சொற்ப பேரம் பேசும் சக்தியை பெருந்தேசியக் கட்சிகளுக்குப் பலிகொடுத்தாயினும் காரியப்பரைக் காப்பாற்றியாகவேண்டும் இல்லாவிட்டால் தாங்களும் கூண்டோடு “கைலாயம்” செல்ல நேரிடும்.

இந்த ஆபத்தான நிலைமையைக் கையாள வேண்டுமானால், “தலைவர் அரச தலைவர்களிடம் சென்று பார்த்தீர்களா எனது கட்சியின் செயலாளருக்கு இப்படியொரு கதி நிகழ்ந்துள்ளது, இவரைக் காப்பாற்றாவிட்டால் நாங்களும் அகப்படுவோம். இப்படி நடந்தால் எமது கட்சி கிழக்கில் செல்வாக்கை இழக்கும், நாம் செல்லாக் காசானால் அது உங்களுக்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் ” என்று பெருந்தலைவர்களிடம் ஒப்பாரி வைப்பதற்கு வசதியாகவே காரியப்பர் அவசர அவசரமாகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.