நீதிபதியின் உயிரை சிங்கள பொலிஸார் தனது உயிரைக் கொடுத்து  காப்பாற்றியுள்ளார் : ஆளுநர்

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வந்ததாக கூறப்படும் நபர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்துள்ளாதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படை பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கூறுகையில்,

 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் உயிரை சிங்கள பொலிஸார் தனது உயிரைக் கொடுத்து  காப்பாற்றியுள்ளார். இன, மத, மொழி பேதமின்றி அந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்றுவதும், சிங்கள இராணுவமே.

ஆனால் அங்கு சிங்கள பொலிஸாரும், தமிழ் இராணுவம் இல்லை. தமிழ் பொலிஸாரும் இல்லை. இவ்வாறான சம்பவங்கள் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே செய்யப்படுகின்றன.

நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், மா.இளஞ்செழியன் உயிரிழந்த பொலிஸாரின் மனைவியைப் பார்த்து கை கூப்புகின்றார்.

பொலிஸாரின் பிள்ளைகளை தத்தெடுப்பதாக சொல்லியிருக்கின்றார். அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அதனை பார்த்த தென்னிலங்கை மக்கள் இப்படி தமிழ் மக்கள் இருக்கின்றார்களா என கேட்கின்றார்கள்.

அங்கு இன, மத, மொழி பேதம் எதுவும் பார்க்கப்படவில்லை. அவ்வாறு தான் கல்வி கற்பிக்கும் போதும் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

(photos – tnx army.lk)