மறிச்சுக்கட்டிப் பிரச்சினை- மூவர் கொண்ட குழு நியமிக்க ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

-ஊடக அறிக்கை

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த பிரதேசங்களை நீக்கி வன பாதுகாப்பு பிரதேச பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் பி.பி அபேயகோன் இணக்கம் தெரிவித்தார்.

முசலி பிரதேசத்தில் மாவில்லு வன பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி செயலாளர் இந்த இணக்கத்தை வெளியிட்டார்..

 முஸ்லிம் இயக்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸின் தலைமையில் இன்று (16) காலை முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சிவில் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், வனபாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முசலி பிரதேசத்தில் பூர்வீக காணிகள் தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து அறிக்கையொன்றை  சமர்ப்பிப்பதற்கான மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதென இச்சந்திப்பு தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் கலந்து ஆராய்ந்து இக்குழுவின் கால எல்லை பற்றி அறிவிப்பதாகவும்  இந்தப்பிரச்சினையை இழுத்தடிக்காது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாகவும் 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட்ட மக்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்தெனவும் இவர்களுக்கு மேலும் அநீதி இழைக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி செயலாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

 கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன், கலாநிதி ஏ.எஸ் நவ்பர் ஆகியோர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி எடுத்து விளக்கினர்.

 முஸ்லிம் கவூன்ஸில் தலைவர் என்.எம் அமீன் தலைமையில், முஸ்லிம் கவுன்ஸில் உபதலைவர் ஹில்மி அஹமட் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனத் தலைவர் பி எம் பாரூக், வை எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் கே.எம்.டீன் தேசிய சூரா கவுன்ஸிலின்  பிரதிநிதி சட்டத்தரணி மபாஸ் யூசுப் மற்றும் முசலி காணி கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களான அலிகான் ஷரீப், முஹம்மது சுபியான், மௌலவி தௌபீக், முஹம்மது காமில், இமாம் இம்தியாஸ் ஆகியோர் உட்பட அமைச்சரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பர்ஸான் ஹமீத் சுஐப் எம் காசிம் ஆகியோரும் இச் சந்திப்பில் பங்கேற்றனர்.