கிழக்கு மாகாண இளைஞர் காரியாலய இடமாற்றம் தொடர்பில் பிரதமரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற குறித்த காரியாலயத்தை அம்பாறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஆசிக் பதுருதீன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 
கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் 2011ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் நிறுவப்பட்டது. அதனூடாக கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் பெரும் நன்மை அடைந்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் சிலரது தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மேற்படி இளைஞர் காரியாலயம் அம்பாறைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. 
தற்காலிகமாக மாற்றப்பட்ட இளைஞர் காரியாலயத்தை அம்பாறையில் நிரந்தரமாக இயங்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், குறித்த காரியாலயத்தை  மீண்டும் சாய்ந்தமருதில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை இளைஞர் ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றது.
அதற்கமைய குறித்த விடயம் சம்பந்தமாக பிரதமரிடம் பேச்சு நடத்தி தீர்வினைப் பெற்றுத் தருமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் அது வேண்டுகோள் விடுத்திருந்தது. 
இது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மேற்படி இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் நிரந்தரமாக இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.