இவ்வருட பல்கலைக்கழக அனுமதி !

Unknownபல்கலைக் கழகங்களுக்கு இந்த வருடம் (2014/2015 கல்வியாண்டு) 25 ஆயிரத்து 395 மாணவர்கள்  அனுமதிக்கபடவுள்ளனர். கடந்த வருடம் (2013/2014) பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த 55 ஆயிரத்து 991 மாணவர்களில் 25ஆயிரத்து 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அனுமதி தொடர்பான கைநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2014/2015 மாணவர் அனுமதி தொடர்பாக வெளியிட்டுள்ள கைநூலில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த வருடம் 14 தேசிய பல்கலைக்கழகங்கள், 03 வளாகங்கள், 05 நிறுவகங்கள் ஆகியவற்றில் பட்டப்படிப்பு கற்கை நெறிகளுக்கு 25395 மாணவர்களை அனுமதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 90 பட்டபடிப்பு கற்கைநெறிகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ள னர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அபேட்சகர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி ”Z” புள்ளியின் தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகங்கத்துக்கு 1955 மாணவர்களும், களணி பல்கலைக்கழகத்துக்கு 2650 மாணவர்களும், மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு 1605 மாணவர்களும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு 3000 மாணவர்களும், பேராதனை பல்கலைக்கழகத்துக்கு 2615 மாணவர்களும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு 1895 மாணவர்களும், சம்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு 1125 மாணவர்களும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 1120 மாணவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 1500 மாணவர்களும், உறுகுனை பல்கலைக்கழகத்துக்கு 1880 மாணவர்களும், ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு 1330 மாணவர்களும், வயம்ப பல்கலைக்கழகத்துக்கு 1020 மாணவர்களும், ஊவா வெல்லலிஸ பல்கலைக்கழகத்துக்கு 670 மாணவர்களும், கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்திற்கு 580 மாணவர்களும், ஸ்ரீபாளி வளாகத்துக்கு 160 மாணவர்களும், திருகோணமலை வளாகத்துக்கு 255 மாணவர்களும், வவுனியா வளாகத்துக்கு 325 மாணவர்களும், சுதெச மருத்துவ நிறுவகத்துக்கு 240 மாணவர்களும், கம்பஹா விக்கிரமாராட்சி நிறுவகத்துக்கு 120 மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழக கணணி கற்கை கல்லூரிக்கு 275 மாணவர்களும், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு 230 மாணவர்களும், இராமநாதன் நுண்கலைக் கழகத்துக்கு 195 மாணவர்களும் மேலதிக உள்ளெடுப்புக்கு 650 மாணவர்களையும் இணைந்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.