ஹக்கீமுக்கெதிராக மூத்த போராளி ஹசன் அலி அவர்களின் வாக்கு மூலம் (நடந்தது என்ன)

முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்­டார்கள். மரமே தனது வாழ்க்­கை­யாக எண்­ணி­யி­ருந்த அவரை ‘நீங்கள் மரத்தின் நிழலில் இருந்­தது போதும்’ என்று தள்ளி வைத்து ஓரம் கட்டி விட்­டார்கள்.

ஹசன் அலியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி பறிக்­கப்­பட்­டு­விட்­டது என்ற தகவல் கிடைத்­ததும் பலர் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­விட்­டனர். கடந்த 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்­டாய உயர்­பீட கூட்­டத்தில் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக மன்சூர் ஏ.காதர் நிய­மிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து ஹசன் அலி பதவி இழந்தார். மறு­தினம் 12 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை ஹசன் அலியைத் தொடர்­பு­கொள்ள பல தட­வைகள் முயன்ற போதும் முடி­யா­மற்­போ­னது. அவர் தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்குப் பதி­ல­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்த்­தி­ருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை அவ­ருடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்த முடிந்­தது.

என்ன நடந்­தது சேர்? கூறு­வீர்­களா? என்று கேட்டோம்.அவர் அமை­தி­யாக,  நிதா­ன­மாக பதி­ல­ளித்தார்.” 2015 ஆம் ஆண்டு கண்டி – பொல்­கொல்­லையில் நடை­பெற்ற கட்­சியின் பேராளர் மாநாட்டில் பொதுச் செய­லா­ள­ருக்­கு­ரிய எனது அதி­கா­ரங்கள் சில பறிக்­கப்­பட்டு வேறொ­ருவர் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டவர் மன்சூர் ஏ.காத­ராவார். அவ­ருக்கு பாரா­ளு­மன்ற விவ­காரம், உயர்­பீட விவ­காரம் என்­பன பொறுப்புக் கொடுக்­கப்­பட்­டன. 

இந்­நி­லையில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய ஒரு கட்­சியில் இரு செய­லா­ளர்கள் செயற்­பட முடி­யாது. இரு­வரில் ஒரு­வரே செய­லா­ள­ராக கட­மை­யாற்ற முடியும். அதனால் ஒரு­வரை தெரிவு செய்து அறி­விக்­கு­மாறு அறி­வித்­தி­ருந்தார். இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­படா விட்டால் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது எனவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. டிசம்பர் 16 ஆம் திக­திக்கு முன்பு இப் பிரச்சினை தீர்க்கப்படவேண்­டு­மெ­னவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் காலக்­கெடு விதித்­தி­ருந்தார். கடி­தத்தின் பிர­தி­யொன்று எனக்கும் கிடைத்­தது.

இந்­நி­லையில் கடந்த டிசம்பர் மாதம் கட்­சியின் உயர்­பீடக் கூட்டம் நடத்­தப்­பட்­டது. இந்தக் கூட்டம் நடை­பெ­று­வ­தற்கு முன்பு நான் தேசியப் பட்­டியல் எம்.பி.பதவி கேட்டு களத்தில் இறங்­கி­யி­ருப்­ப­தாக பிர­சாரம் செய்­யப்­பட்­டது. ஆனால் நான் தேசிய பட்­டியில் எம்.பி.பதவி கேட்டு தலை­வரை வற்­பு­றுத்­த­வில்லை. எனது பொதுச் செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் திரும்பத் தர வேண்­டு­மென்றே போரா­டினேன்.

டிசம்பர் 14 ஆம் திகதி நடை­பெற்ற உச்ச பீட கூட்­டத்தில் பொதுச் செய­லாளர் பதவி விவ­கா­ரத்தில் நானும் தலை­வரும் முரண்­பட்டு பிரிந்திருக்கக் கூடாது. கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது. கட்­சியை காப்­பாற்ற வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தலை­வரும், நானும் கதைத்து ஒரு முடி­வுக்கு வர வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக கமிட்­டி­யொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.அடுத்த தினம் டிசம்பர் 15 ஆம் திகதி உயர்­பீட உறுப்­பினர் அன்­வரின் தெமட்­ட­கொ­டை­யி­லுள்ள காரி­யா­ல­யத்தில் நானும் தலை­வரும் சந்­தித்தோம். அங்கு வந்த தலைவர் முதலில் வுழூ செய்து கொண்டார். பின்பு இரண்டு ரக்அத் சுன்னத் தொழு­கையை நிறை­வேற்­றினார். என்னை கட்­டி­ய­ணைத்து முஸாபஹா செய்து கொண்டார். பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என்றார்.

நான் தலை­வரிடம் தெரி­விக்க வேண்­டி­ய­தை­யெல்லாம் தெரி­வித்தேன். நான் தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­த­போது  தேசியப் பட்­டி­யலில் எம்.பி.பதவி தரு­வ­தாகக் கூறி அதனைத் தடுத்­த­தையும் விளக்­கினேன். அனைத்­தையும் தலைவர் ஏற்­றுக்­கொண்டார்.
நான் வுழூ­வுடன் கதைக்­கிறேன். அது நான் தந்த உறுதி. அதனை நான் நிறை­வேற்­றுவேன் என்றார். தேர்­த­லொன்று விரைவில் வரப்­போ­கி­றது. கட்­சியை முடக்க முடி­யாது. தேர்தல் ஆணை­யா­ளரைச் சந்­தித்து விட்டுக் கொடுப்­பு­களைச் செய்ய வேண்­டு­மெ­னவும் கூறினார். 
நீங்கள் என்ன சொல்­கி­றீர்கள்? என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் என்றும் என்னிடம் வின­வினார்.

ஜன­வரி 9 ஆம் திக­தி­யன்று பாரா­ளு­மன்ற அமர்வில் நீங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி பிர­மாணம் செய்து கொள்­ளலாம். அதற்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் செய்­யப்­படும். நாளைக்குப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார். சகல அதி­கா­ரங்­களும் கொண்ட செய­லாளர் பத­வியை பேராளர் மாநாட்டில் உங்­க­ளுக்குத் தருவேன் என்று கூறி தலைவர் என்னை மீண்டும் முஸாபஹா செய்து கொண்டார்.

அப்­போது என்­று­மில்­லாத நம்­பிக்கை தலைவர் மீது ஏற்பட்­டது. நானும் மஃரிப்  தொழுது விட்டு வுழூ­வு­டனே இருந்தேன். சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்­பா­விட்டால் நான் ஒரு முஸ்­லி­மாக இருக்க முடி­யாது. அதனால் நானும் நம்­பினேன்.மறுநாள். அது டிசம்பர் 16 ஆம் திகதி. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவைச் சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. எமக்­கான சந்­திப்பு நேரம் பிற்­பகல் 3 மணிக்கே தரப்­பட்­டிருந்தது. நான் அங்கு பிற்­பகல் 2.45 மணிக்கே சென்­று­விட்டேன். எமது நேரம் வரும் வரை தேர்­தல்கள் ஆணைக்­குழு தலை­வரின் அலு­வ­ல­கத்தில் காத்­தி­ருந்தேன். அப்­போது தலைவர் வந்தார். வந்­ததும் எனது கையில் ஒரு பைலைத் தந்தார். அந்தப் பைலினுள் சல்மான் எம்.பியின் இரா­ஜி­னாமா கடிதம் இருந்­தது. 

சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­(16.12.2016) செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளார். இப்­போது அதற்­காக அவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு போய்க்­கொண்­டி­ருக்­கிறார் என்றார். ஆனால் சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை கொடுக்­க­வில்லை.தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வு­ட­னான சந்­திப்பின் போதும் எனக்கு பொதுச் செய­லாளர் பத­வியும் தேசி­யப்­பட்­டி­யல் எம்.பி பத­வியும் வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஜன­வரி 9 ஆம் திகதி நான் பாரா­ளு­மன்­றத்தில் இருக்க முடியும் என்றும் உறு­தி­யாகக் கூறினார்.

ஜன­வரி 7 ஆம் திகதி அல்­லது ஜன­வரி 8 ஆம் திகதி என நினைக்­கிறேன். என்னைத் தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்பு கொண்டார். 10 ஆம் திக­திக்கு தாருஸ்­ஸ­லா­முக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்­தார். அவ­ரது அழைப்பை ஏற்று தாருஸ்­ஸ­லா­முக்குப் போனேன்.
நான் மூதூ­ருக்குப் போகிறேன். என்­னுடன் வாருங்கள் என்று தாருஸ்­ஸ­லாமில் வைத்துக் கூறினார், 15 ஆம் திகதி புத்­த­ளத்தில் ஒரு புரோ­கிராம் இருக்­கி­றது. நீங்கள் வர­வேண்டும் என்றார். அன்று சல்­மானின் இரா­ஜி­னாமா பற்­றியும் பேசினார். சல்மான் ஜனவரி 16 ஆம் திக­தியே இரா­ஜி­னாமா கடி­தத்தை கைய­ளிக்­க­வுள்­ளளார். அதனால் உங்கள் பெயர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக 18 ஆம் திக­தியே கசெட்  பண்­ணப்­படும் என்றும் தெரி­வித்தார்.

புத்­த­ளத்­துக்கு நானும் அவ­ருடன் போனேன். இரு­வரும் இரவு சாப்­பாட்டை முடித்தோம். உங்­க­ளுக்கு நாளை காலையில் கோல் பண்­ணுறேன் என்று கூறிச்­சென்­றவர் அதன் பின்பு என்னை தொடர்பு கொள்­ள­வில்லை. பெப்­ர­வரி 4 ஆம் திகதி கட்­சியின் அர­சியல் உயர்­பீட கூட்டம் கூட்­டப்­பட்­டது. நானும் கூட்­டத்­துக்கு சென்­றி­ருந்தேன். தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் சமு­க­ம­ளிக்­க­வில்லை. அக்­கூட்­டத்தில் பஷீர் சேகு­தா­வூத்தை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வது தொடர்­பாக நிகழ்ச்சி நிரலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. செய­லாளர் கூட்­ட­றிக்­கையை வாசித்து முடித்து வேறு ஏதா­வது……. என்று வின­வி­ய­போதே  நிகழ்ச்சி நிரலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­காத விட­யத்தை பிர்தௌஸ் முன்­னெ­டுத்தார். பஷீர் சேகு­தா­வூத்தை பத­வி­வி­யி­லி­ருந்து விலக்க வேண்டும் என்றார்.

மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் கடு­மை­யாக நின்று பஷீரை விலக்க வேண்டும் என்­றார்கள். விருப்­ப­மில்­லா­த­வர்கள் கையை உயர்த்­துங்கள் என்று கேட்­கப்­பட்­டது. சிலர் கை உயர்த்­தி­னார்கள். விரும்­பு­கி­ற­வர்கள் கை உயர்த்­துங்கள் என்­றார்கள். சிலர் உயர்த்­த­வில்லை. இச்­சந்­தர்ப்­பத்தில் ஜவாட் எழுந்து நின்று இவ்­வாறு சட்ட ரீதி­யாக தீர்­மானம் எடுக்க முடி­யாது. ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்க வேண்டும் என்றார். பஷீரை விலக்­கு­வ­தென ஏக­ம­ன­தாக முடிவு எடுக்­கப்­பட்­டது.

அதன் பின்பு அடுத்த கூட்­டத்தில் சந்­திப்போம் என தலைவர் கூட்­டத்தை நிறைவு செய்தார். கட்சி யாப்புத் திருத்தம் பற்றிப் பேசப்­ப­ட­வில்லை. அதற்­காக இரு மாதங்­க­ளுக்கு முன்பு ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது­பற்றி பேசப்­ப­ட­வில்லை. நான் யாப்புத் திருத்தம் பற்­றிய சிபா­ரி­சு­களை ஏற்­க­னவே கொடுத்­தி­ருந்தேன். கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே நான் நிந்த வூரின் அமைப்­பா­ள­ராக இருந்­து­வ­ரு­கிறேன். கட்­சியின் முத­லா­வது பகி­ரங்கக் கூட்டம் எனது வீட்டு முற்­றத்தில் மாமர நிழ­லிலே நடை­பெற்­றது. அந்த இடத்­திலே முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

கடந்த 12 ஆம் திகதி நடை­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு எனக்கு அழைப்­பிதழ் தரப்­ப­ட­வில்லை. தபாலில் அழைப்­பிதழ் அனுப்­பப்­பட்­ட­தாகக் கூறப்­பட்டது. ஆனால் தபா­லிலும் எனக்கு அழைப்­பிதழ் அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. தொகுதி அமைப்­பாளர் மூலமே அழைப்­பி­தழ்கள் பகி­ரப்­ப­டு­வது வழக்கம். ஆனால் இம்­முறை அது பின்­பற்­றப்­ப­ட­வில்லை. அம்­பாறை  மாவட்­டத்தை சேர்ந்த அநே­க­ருக்கு அழைப்­பிதழ் அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. தாருஸ்­ஸ­லா­மிலே பேராளர் மாநா­டு­க­ளுக்­கான அழைப்­பி­தழ்கள் அனுப்பும் பணிகள் நடை­பெ­று­வது வழக்­க­மாகும். ஆனால் இம்­முறை வழ­மைக்கு மாறாக தலை­வ­ரது அமைச்சுக் காரி­யா­ல­யத்­திலே இவ்­வே­லைகள் நடை­பெற்­றுள்­ளன.

கடந்த 11 ஆம் திகதி நடை­பெற்ற கட்­டாய உயர்­பீட கூட்­டத்தில் நிர்­வா­கிகள் தெரிவு இடம் பெற்­றது. தலை­வ­ராக ரவூப் ஹக்­கீமும் செய­லா­ள­ராக மன்சூர் ஏ.காதரும்  நிய­மிக்­கப்­பட்­டனர். எனக்கு தவி­சாளர் பதவி வழங்­கப்­பட்­டது. நான் மறுத்தேன். சகல அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் பத­வி­யையே நான் வேண்டி நின்றேன்.நஸீர் அஹ­மட்டும் அன்­வரும் என்­னிடம் வந்து தவி­சாளர் பத­வியை எடுங்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை பிறகு தரு­கிறோம் என்­றார்கள். ஹரீஸ் எம்.பியே என்னை  இந்தப் பத­விக்கு முன்­மொ­ழிந்தார். அவ­ருக்கு நான் நன்றி கூறினேன். ஆனால் இந்தப் பத­வியை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன் என்றேன்.

ஒரு­வ­ரிடம் இருந்து பறித்­தெ­டுத்த பத­வியை ஏற்­றுக்­கொள்ளும் வழி­கெட்ட ஆள் நானல்ல. கடை­சி­வரை எனது தனித்­து­வத்தை அட­கு­வைக்க மாட்டேன். செய­லாளர் பத­விக்­கான நிய­மன நேரத்தில் கட்­சியின் தலைவர், செய­லாளர் நிய­மிக்கும் அதி­கா­ரத்தை எனக்குத் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.செய­லாளர் பத­வியில் மாற்றம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. மன்சூர் ஏ.காதரே செய­லா­ள­ராக இருக்க வேண்டும். நான் நிய­மிப்­ப­வரை விரும்­ப­ா­விட்டால் நீக்கிக் கொள்­ளலாம் என்றார். நிஸாம் காரி­யப்பர் இதை நியா­யப்­ப­டுத்­தினார். 

‘தலை­வரே நீங்கள் தலை­வ­ரா­கவும் செய­லா­ள­ரா­கவும் இருங்கள்’ என்று ஜவாட் கூறினார்.‘நீங்கள் நிய­மிக்கும் ஒரு­வரை உயர் பீடம் விலக்­காது. நீங்­களே நிய­மி­யுங்கள். எல்லா அதி­கா­ரங்­க­ளையும் எடுத்துக் கொள்­ளுங்கள்’ என சம்­மாந்­துறை மன்சூர் கூறினார். செய­லாளர் பதவி வகிப்­பவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. அவர் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தென்றால் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்றும் கூறப்­பட்­டது.

இச் சந்­தர்ப்­பத்தில் நான் குறுக்­கிட்டேன். ‘தலை­வரே உங்­க­ளுக்குப் பிரச்­சினை நான் தானே. தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்­றெல்லாம் என்னைச் சுட்­டிக்­காட்­டியே கூறு­கி­றீர்கள். எனக்கு செய­லாளர் பதவி வேண்டாம். செய­லாளர் பத­வியை இரண்­டாகப் பிரிக்­காமல் முழு­மை­யாக ஒரு­வ­ருக்கே கொடுங்கள். ஒரு கட்­சியில் தலைவர் மற்றும் செய­லாளர் பத­வி­களே முக்­கி­ய­மா­னவை. இந்தப் பத­வியை மலி­னப்­ப­டுத்த வேண்டாம். எனது 32 வருட கால சேவையை முடித்து நான் போகிறேன் என்று எழுந்தேன்.

இவ்­வி­டத்தில் ஜவாட் எழுந்தார். நாளைக்குப் பேராளர் மாநாடு. ஹசன் அலி தவி­சாளர் பத­வியை வேண்டாம் என்று கூறி­விட்டார். அதனால் அவர் பேராளர் மாநாட்டில் சாதா­ரண கதி­ரையில் தான் அமர வேண்டும். அந்தக் காட்­சியை எம்மால் பார்க்க முடி­யாது. அவர்தான் கட்சி என்று கூறினார் ஜவாட். சேர்…. தவி­சாளர் பத­வியை ஏற்றுக் கொள்­ளுங்கள். நீங்கள் மேடையில் இருக்க வேண்டும் என்­றார்கள். கெஞ்­சி­னார்கள்., கோஷம் எழுப்­பி­னார்கள்.

இது என்ன நாடகம்! எனக்­கென்று தனித்­துவம் உள்­ளது. இலட்­சியம் உள்­ளது. எழுந்து நின்றேன். எனது கண்கள் கலங்­கின. உணர்ச்சி வசப்­பட்டேன். டிபரன்ட் மூடுக்­குள்­ளானேன்.எனது 30 வருட அர­சியல் வாழ்­வு  முடி­வுக்கு வந்­துள்­ளது என்று கவ­லை­யுற்றேன். எழுந்து சென்று லீடரைக் கட்­டிப்­பி­டித்து முஸாபஹா செய்தேன். இது எனது கடைசி நாள் என்றேன்.நான் உயர்­பீடக் கூட்­டத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றினேன். நஸீர், ஜவாட் எல்­லோரும் ஓடி வந்து என்னைத் தடுத்­தார்கள். நான் எனது முடிவில் உறு­தி­யாக வெளி­யே­றினேன்.

உயர்­பீடக் கூட்டம் முடி­வுற்று என் பின்­னா­லேயே எனது வீட்­டுக்கு ஹக்கீம் வந்தார். ‘என்னை மன்­னித்துக் கொள்­ளுங்கள். பல சந்­தர்ப்­பங்­களில் உங்கள் மனதைப் புண்­ப­டுத்­தி­விட்டேன்’ என்றார். நான் அரை மணித்தியாலமாக அவரது முகத்தைப் பார்க்காமலேயே இருந்தேன்.என் முன்னே கட்சியும் கட்சியின் சின்னமும் சமூகமுமே நிழலாடியது. லீடருடன் அன்வர், கலீல் மௌலவி போன்றோரும் வந்திருந்தார்கள்.‘லீடர் நீங்கள் போய்விடுங்கள் நான் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மர்ஹூம் அஷ்ரபின் இலட்சியமான கரையோர மாவட்டக் கோரிக்கை உள்வாங்கப்படாமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 30 வருட காலத்தில் ஏனைய கட்சிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அனைத்திலும் கரையோர மாவட்டக் கோரிக்கை உள்வாங்கப்பட்டிருந்தமை எனது நினைவுக்கு வருகிறது. கட்சியில் நானில்லாத வெறுமையை இப்போது உணர்கிறேன்.

அல்லாஹ்தான் கட்சியையும் சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் என துவா செய்கிறேன். சமூகம் நடந்து முடிந்த சம்பவங்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறேன்” என்று தனது மனக்கிடைகளை வெளிப்படுத்தினார்.

விரைவில் தான் ஊர் ஊராகச் சென்று மக்கள் மத்தியில் இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.தற்சமயம் உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா சென்றுள்ள அவர் நாடு திரும்பியதும் எவ்வாறான அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ARA.Fareel