மர்ம தொலைபேசி அழைப்பினால் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்

lufthansa_b747-8_2

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு சென்றது.

நடுவானில் சுமார் ஆயிரம் மைல் தூரத்தை அந்த விமானம் கடந்து சென்றபோது, லுப்தான்ஸா நிறுவனத்துக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. ஹுஸ்டனில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு சென்று கொண்டிருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்முனையில் பேசிய குரல் எச்சரித்தது.

இதையடுத்து, அந்த விமானிக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டது. நியூயார்க் மாநில வான்வெளியில் பறந்த அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

அனுமதி கிடைத்தவுடன், இன்றிரவு 8.30 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 530 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.