ராசிக் தொடர்பான ராஜிதவின் கருத்து முற்றிலும் பொய்யான, உண்மைக்கு புறம்பான தகவலாகும்

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளரை தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனராக சித்தரிப்பது தவறானதாகும் – அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்

raajitha sltj

GSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சி செய்யும் இலங்கை அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 03.11.2016 அன்று கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது. குறித்த ஆர்பாட்டத்தை நடத்தினால் முஸ்லிம்களை அடித்து விரட்டுவதாக பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் மிரட்டல் விடுத்திருந்தார். ஞானசார தேரரின் மிரட்டலையும் மீறி நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறையிலான ஆர்பாட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி முடித்தது.

குறித்த ஆர்பாட்டத்தில் GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் தெளிவுபடுத்தப் பட்டது. அதனை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களை அடித்து விரட்டுவோம் என்று மிரட்டல் விடுத்த ஞானசார தேரரின் கருத்துக்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் ஞானசார தேரருக்கு எதிராக பேசியதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதற்கு முன்னால் மத நிந்தனை குற்றச்சாட்டில் பதியப்பட்டுள்ள வழக்கின் பினை நிபந்தனையை மீறினார் என்ற குற்றச் சாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29.11.2016ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளரின் கைது தொடர்பில் ஒவ்வொருவரும் தமது கற்பனைக்கு எட்டும் விதத்தில் பல விதமான கதைகளையும் கருத்துக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டாரா தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர்?
———————————————–

நேற்றைய தினம் (23.11.2016) அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோ.அப்துர் ராசிக் அவர்கள் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

இது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு புறம்பான தகவலாகும். 

அமைச்சரவை அந்தஸ்து பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முக்கியம் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவர் இது போன்ற கற்பனையான கருத்துக்களை வெளியிடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பினை நிபந்தனைகளை மீறினார் என்கிற குற்றச்சாட்டில் தான் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரே தவிர வேறு குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர் மீது நீதிமன்றம் சுமத்த வில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய புலனாய்வு மையத்துடன் (NIB) தொடர்பு வைப்பது தேசத் துரோகமா?
——————————————————–

ஒரு நாட்டை பொறுத்த வரையில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பல பாதுகாப்பு பிரிவுகள் இயங்கி வருவது வழக்கமான ஒன்றாகும்.

CID, TID, CCD என்று பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போல NIB என்பதும் அரச புலனாய்வுப் பிரிவாகும். அதிலும் குறிப்பாக கடந்த ஆட்சியின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் ஒரு முக்கியமான அரச நிறுவனம் என்ற வகையில் அனைத்து இயக்கங்கங்கள், சங்கங்கள், சிவில் அமைப்புகளுடன் சுமுகமான தொடர்புகளை பேணுவது பாதுகாப்புத் துறையின் வழமையான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் தேசிய புலனாய்வு மையமாக (NIB) இருந்தாலும், CID, TID, CCD என்று அரசு சார்ந்த எந்த நிறுவனங்கள் ஆனாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் தொடர்பில் எம்மிடம் விசாரிக்கும் போது அவர்களுக்கு எமது செயல்பாடுகளை தெளிவாக தெரிவிப்பது என்பது வெளிப்படைத் தன்மை பேணும் ஒரு அமைப்பின் கடமையாகும்.

நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, ஜனநாயக வழியில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பால் கேள்விகள் முன்வைக்கப்பட்டால் வெளிப்படைத் தன்மை பேணி எமது செயல்பாடுகள் தொடர்பில் நாம் பாதுகாப்புத் தரப்புக்க விளக்கம் அளித்திருக்கிறோம்.

NIB என்பது அரசாங்கத்தின் தேசிய புலனாய்வு அமைப்பே தவிர தீவிரவாதிகளின் ஒரு நிறுவனம் அல்ல. அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவுடன் எமது செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மைகளை நாம் பேணி வருவதை தவறு காணுவது அல்லது தவறாக சித்தரிக்க முனைவது என்பது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரின் சரியான நடை முறையாக அமையாது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

போலியான சந்தேகத்தை தோற்றுவித்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே!
———————————————

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்திற்கு பின் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பில் கருத்து வெளியிட்டு வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தான் அமைச்சர் ராஜிதவின் இந்தக் கூற்றுக்கான அடிப்படையான கருத்தாக்கத்தை உண்டாக்கியவராவார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் பற்றி கருத்து வெளியிடும் இடங்களிலெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் முன்னால் ஜனாதிபதி மற்றும் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தொடர்பிருப்பதாகவும், பொது பல சேனா என்கிற இனவாத அமைப்பும் தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இஸ்லாமிய பிரச்சார அமைப்பும் ஒருவரால் தான் இயக்கப் படுகிறது என்றும் அமைசர் ஹக்கீம் கருத்து வெளியிட்டு வருகிறார்.

இது முற்றிலும் பொய்யான கற்பனையின் உச்சகட்டமாகும். பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் போன்றவர்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற வங்குரோத்தான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது முஸ்லிம் சமுதாய பேரியக்கமாகும். இந்த அமைப்பின் மூலம் நாம் இன்று தான் முதன் முதலாக ஆர்பாட்டம் நடத்தியதைப் போல் அமைச்சர் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பல விதமான அநியாயங்கள் இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஆச்சரிய மௌனம் காத்த நேரத்தில் இனவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பியது இந்த தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரம் தான்.

அது மாத்திரமன்றி, இலங்கையில் இரத்த தானம் செய்வதில் முன்னிலை வகிப்பது இந்த இஸ்லாமிய அமைப்பு தான். 

அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது முழுமையாக தனது தொண்டர்களை இறக்கி முழுக்க முழுக்க மக்கள் பணியாற்றிய பாரிய இயக்கம் தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.

எந்தவொரு வெளிநாட்டு அமைப்பிடமிருந்தோ, வெளிநாட்டு அரசுகளிடமிருந்தோ எவ்வித உதவிகளையும் பெற்றுக் கொள்ளாமல் சமுதாயப் பணிகளை பாரிய அளவில் முன்னெடுக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத். வெளிநாட்டு நிதி நிறுவணங்களிடமிருந்து எவ்விதமான பண உதவிகளையும் பெற்றுக் கொள்வதில்லை என்று அமைப்பு விதியிலேயே தடை ஏற்படுத்தி செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத்தை வெளியாட்களின் பணத்தை கொண்டு இயங்குபவர்கள் என்று வீன் பழி சுமத்தி அரசியல் இலாபடையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முனைவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.

அமைசர் ராஜித சேனாரத்ன அவர்கள் முன்னால் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு படுத்தியே தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு அடித்தளமிட்டவர் அமைசர் ரவூப் ஹக்கீம் ஆகும். 

ஜனநாயக ரீதியில் உரிமைக்காக குரல் கொடுத்து இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து முஸ்லிம் உரிமைகளுக்காக போராடி வரும் ஒரு அமைப்பை முஸ்லிம்களினால் புறக்கணிக்கப்பட்ட முன்னால் ஜனாதிபதியுடனும் மற்றும் சில அமைப்புகளுடன் இணைத்துப் பேசுவதின் மூலம் தனது கற்பனை வளத்தின் திரமையை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் புதியது அல்ல.
———————————————-

தவ்ஹீத் ஜமாஅத் உரிமைகளுக்காக குரல் கொடுத்து ஆர்பாட்டங்களை நடத்துவது என்பது புதிய விடயமல்ல. மாறாக இதற்கு முன்பாகவும், பல போராட்டங்களை நாம் ஜனநாயக முறைப்படி நடத்தியிருக்கிறோம்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் ஆட்சிக் காலத்திலேயே அவருக்கு எதிராகவே நாம் பல ஆர்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். எவ்வித அரசியல் ஆதாயமும் இன்றி, வாக்கு வங்கி அரசியல் இல்லாமல் ஆண்மீகப் பணியாற்றும் ஒரு அமைப்பை பற்றி பொய்யான செய்திகளை கூறி பொறுப்பான பதவியின் கண்ணியத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ஹக்கீம் அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். 

உரிமைப் பிரச்சினையில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறோம்.
———————————————–

முஸ்லிம்களின் உரிமை சார்ந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பது தொடர்பிலான ஆர்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் கலந்து கொண்டு பேசினார். 

குறித்த பிரச்சினை தொடர்பில் தற்போது வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.

நாம் எவ்விதத்திலும் அரசியலில் ஈடுபடும் ஒரு அமைப்பு அல்ல. மாறாக இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்வதுடன் இலங்கையில் அனைத்து அமைப்புகளையும் விட அதிகளவில் நற்பணிகளை முன்னெடுக்கும் ஒரு அமைப்பாகும். 

ஜமாஅத்தின் செயலாளரின் கைது என்பது அநியாயமாக நடைபெற்ற ஒன்றாகும். குறித்த கைது விவகாரத்தை சட்டப்படி நாம் எதிர்கொள்வோம். நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எம் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவிருக்கிறோம்.

ஆகவே, இந்த விடயத்தில் அமைச்சர்களோ அல்லது எதிர் கட்சியினரோ அரசியல் செய்ய வேண்டாம் என்று வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.

இவன்

M.F.M ரஸ்மின் MISc 

துணை செயலாளர்

தவ்ஹீத் ஜமாஅத்