ஹக்கீமின் கட்டார் பயணமானது ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்து கொண்டிருந்த கதைக்கு ஒப்பானது!

15107388_1911823665717639_1513966453511853396_n_fotor

“ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்து கொண்டிருந்தானாம்” இந்த கதையாகத் தான் தற்போது அமைச்சர் ஹக்கீமின் கதையும் அமைந்துள்ளது.அமைச்சர் ஹக்கீமின் கட்டார் நாட்டிற்கான  விஜயமானது பல நாட்கள் முன்பு திட்டமிடப்பட்ட ஒன்றாகவிருந்தாலும் தற்போதைய சூழ் நிலையில் அது அவசியமற்ற ஒன்றாக கருதி அதனை அவர் பிற்போட்டிருக்க வேண்டும்.

தற்போது இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரம் ஏற்படுவதற்கான தோற்றங்களை இந்த வாரம் மிகவும் அதிகமாக அவதானிக்க முடிகிறது.இதனை ஒரு சிங்கள ஊடகமும் வெளியிட்டிருந்தது.இலங்கை நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர்.இனவாதிகள் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை தயார் படுத்தி வைத்துள்ளனர்.நேற்று கண்டியில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதில் மிகக் கடுமையான வாசகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பாவிக்கப்பட்டிருந்தன.நேற்று தம்புள்ளை ஜெய்லானி எதிராக அவர்கள் பல நாட்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.இது போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் தான் அளுத்கமை கலவரம் ஏற்பட்டிருந்தது.இத் தருவாயில் அமைச்சர் ஹக்கீமிற்கு கட்டார் நாட்டு பயணம் தேவை தானா? இவரது தனது வெளிநாட்டு பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த எதனையும் காணமுடியவில்லை.

இவர் தனது கட்சிக் காறர்களை அழைத்து சென்றுள்ளதை பார்க்கும் போது இனிமையான இருந்து வர சில நாட்கள் கட்டார் சென்றுள்ளதாகவே கருத தோன்றுகிறது.சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீமின் சகோதரர் கட்டார் விஜயம் செய்திருந்தார்.இவர் தனது தொழில் விடயமாக கட்டாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாக சிலரால் கூறப்பட்டது.அந்த தொழிலில் அமைச்சர் ஹக்கீமிற்கு பங்கிருக்கலாம்.இலங்கையில் பிரச்சினை பூதாகரமாக இருக்கும் போது கட்டார் இலங்கை முஸ்லிம்களின் தேவைகள் பற்றி அறிய அமைச்சர் ஹக்கீம் ஏற்பாடு செய்துள்ளார்.

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புக்கள்,அரசியல் வாதிகள் இந்த நிலைமையை எதிர்கொள்வதெப்படி என மிகக் கடுமையான சிந்தனையில் திளைத்துள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீமிற்கு கட்டார் விஜயம் தேவை தானா? இலங்கை முஸ்லிம்களின் ஒரு கட்சித் தலைவன் என்ற வகையில் இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் நாட்டில் இருப்பதே மிகப் பொருத்தமானது.நாட்டில் இருந்து தான் நாம் எதை கிழிக்கப்போகிறோம் என அமைச்சர் ஹக்கீம் நினைக்கின்றாரோ தெரியவில்லை.

இப்றாஹிம் மன்சூர்