புதுக்கட்சிக்கு 10 இலட்சம் உறுப்புரிமைகளை விட அதிகளவானோர் எமது கட்சியின் உறுப்புரிமையை கேட்கின்றனர்

நாம் உருவாக்கிய புதிய கட்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான உறுப்புரிமைகள் கோரப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மஹிந்தவின் பிறந்தநாளை முன்னிட்டு நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதுக்கட்சிக்கு 10 இலட்சம் உறுப்புரிமைகளே எதிர்பார்த்தோம் ஆனால் அதை விடவும் அதிகளவானோர் எமது கட்சியின் உறுப்புரிமையை கேட்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டலின் கீழும், மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே இந்த புது கட்சி முன்னெடுத்துச்செல்லப்படும்.

முன்னாள் ஜனாதிபதியுடன் புதுக்கட்சி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு செல்கின்றோம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு முழுமையாக செயற்படுவாரா என்பது பற்றி எமக்கு தெரியாது எனவும் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

மேலும், இதே நிகழ்வில் கலந்து கொண்ட பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பல்வேறு கட்சிகள் இணைந்து வருகின்றன.

பழைய கட்சிகள் மற்றும் புதிதாக உருவாகும் கட்சிகளும் இணைந்து வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாட்டில் இரண்டு அணிகள் ஏற்படும்.

அவ்வாறான நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாமும் எஞ்சியிருக்க மாட்டோம் எனவும் குணவர்தன குறிப்பிட்டார்.