தயா கமகேயின் இனவாதத்தை வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்!

collage_fotor-7

நேற்று இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இறக்காமம் சிலை வைப்பு தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்  வினா எழுப்பிய போது அமைச்சர் தயா கமகே முன் வைத்த கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை.இதன் போது குறித்த புத்தர் சிலையை அகற்றக் கோரினால் அதற்கு உடன்பட மாட்டேன்.பதவியை துறந்து வீட்டுக்குச் செல்வேன் எனக் கூறியுள்ளார்.இதனை அங்கு அமர்ந்திருந்த எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வாய் மூடி காது தாழ்த்தி கேட்டுவிட்டு வந்துள்ளனர்.இதற்குத் தான் நாம் இவர்களை அரசியல் பிரதிநிதியாக தெரிவு செய்து அனுப்பினோமா? தயா கமகேயினால் தான் பதவியை இராஜினாமா செய்வேன் என மிரட்ட முடியுமாக இருந்தால் ஏன் எமது அரசியல் பிரதிநிதிகளால் அவ்வாறு அழுத்தம் வழங்க முடியாது?

அண்மையில் கிளிநொச்சியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்த போது பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கு என்ற வினாவை எழுப்பி இருந்தார்.இதனை பௌத்த மதம் அனுமதிக்கவில்லை எனவும் கூறி இருந்தார்.அதாவது தயா கமகேயின் கூற்றை அமைச்சர் ராஜித எதிர்த்துள்ளார்.இப்படியான ஒரு விடயத்திற்காக தனது பதவியை கூட துறக்க ஒரு மாற்று மதத்தவர் தயார்.இதன் மூலம் முஸ்லிம்களின் இருப்புக்கள் கேள்விக் குறியாக்கப்படுகின்ற போதும் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

கிளிநொச்சி சிலை விவகாரத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலையிடுகிறார்.அம்பாறை சிலை விவகாரத்தில் ஏன் அவர் தலையிடவில்லை.இது தான் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் செய்யும் அரசியல் போக்கு.அம்பாறையின் அரசியல் அதிகாரம் மு.காவின் கையில் உள்ளது.மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளனர்.கிழக்கு முதலமைச்சரும் உள்ளார்.இன்னும் என்ன அதிகாரம் தந்தால் இவ்வாறான இனவாதங்களை உங்களால் எதிர்கொள்ள முடியும்?

துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.