கஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளவும் : ஜனாதிபதி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 280 புலனாய்வு பிரிவு அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாளில் 20 புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என்ற கணக்கில் அழைத்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு முன்னர் தீர்மானித்திருந்தன.

இது தொடர்பில் தகவல் வெளியானதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.

குறித்த அதிகாரிகளின் கடமைகளை பாதிக்காத வகையிலும், அவர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தாத வகையிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமையவே நாள் ஒன்றுக்கு 5 புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என கணக்கில் விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அண்மைக்காலமாக முப்படையினர் தொடர்பில் ஜனாதிபதி தீவிர கரிசனை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.