தேர்தலில் தோல்வியடைந்தால் அதை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்வேன்: டொனால்ட் டிரம்ப்

donald_trump_rnc_speech_5_h_2016

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் ஊடக குழுமங்களின் அதிபரும் பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சுமார் 20 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இடையிலான வாக்குவாதங்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது.

இதுவரை மூன்றுமுறை நேருக்குநேர் விவாத நிகழ்ச்சிகளில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

இந்நிலையில், ஓஹியோ மாநிலத்தில் உள்ள டெலாவேர் நகரில் நேற்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இன்று உங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றால் ஏற்றுக் கொள்வேன்.

மாறாக, தேர்தல் முடிவுகள் கேள்விக்குரிய வகையில் அமைந்தால் அதை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்வேன்’ என குறிப்பிட்டுள்ளார்.